Tuesday, June 12, 2018

சித்த மார்க்கம் தொடர்ச்சி 3

ஒருவர், "இன்னிக்கு மாட்டிண்டார்! சரியா ஆணி அடிக்கப் போறார், பெரியவர்" என கூறினார்.

"எங்களுக்குள் பெரியவர் சின்னவர்  எல்லாம் இங்கு கிடையாது. அனைவரும் சமம். அது இருக்கட்டும். மனிதனை தவிர வேறு ஒரு சூழ்நிலையும் இங்கு கிடையாதா?"

பிற உயிரினங்கள், இயற்கை, நதி, பூமி, ஆகாயம், காற்று,அக்னி, இப்படி எத்தனையோ விஷயங்களை மனிதன் உபயோகப் படுத்திக்க கொள்கிறானே, அவற்றுக்கு உயிர் கிடையாதா? ஏன், அவை பேசாது என்று நினைக்கிறாயா?

இல்லை, அவை பேசும் மொழி மனிதனுக்கு கேட்பதில்லை, கேட்டாலும் புரியாது. புரிய வேண்டுமானால், அதெற்கென ஒரு நிலையை அடைய வேண்டும். அந்த நிலையை அடைய அவனுக்குள் ஒரு கனிவு எப்பொழுதும் சுரந்து கொண்டே இருக்க வேண்டும். அந்த கனிவு, வற்றாத ஜீவ நதியாக எல்லாவற்றையும் தழுவும் பொழுது, அவன் மாறும்பொழுது, அனைத்தும் கேட்கும், புரிந்து கொள்ள முடியும்.  ஆனால் மனிதனுக்கு எங்கே நேரம் இருக்கிறது? தன் சுய ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள, எதையும் அழித்து, எதையும் கீழடக்கி, தனதாக்கி கொள்ளத்தானே நினைக்கிறான். இதுதான் நான் முதலில் கூறிய 95%. இங்கிருக்கும் நாம் ஐந்து பேரும் 5% என்று ஒரு உதாரணத்துக்காக வைத்துக் கொண்டால், இந்த நிலை என்று 100% ஆகிறதோ அன்று 95% வென்று விடுவோம். ஆனால் அது என்று? சித்தர்களும்/முனிவர்களும், சித்த மார்க்க யோகிகளும் இன்றும், என்றேனும் 100% ஆகி, பின்னர் அந்த 100லேயே இருந்து மனிதனை மேலே எடுத்து செல்ல காத்திருக்கின்றனர். அதற்கான முதல் படியாக பிரார்த்தனையை கூறலாம்.

நீ சொன்ன சூழ்நிலைகளுடன், இனி கூறுகிற சூழ்நிலைகளையும் சேர்த்துக்கொள். விரைவில் உன் கர்மா கரைந்துவிடும், உடல் சுத்தமாகும், ஆன்மா மேல் நிலைகளை அடையும்! ஆனால் பொறுமை தேவை. இன்று அரச மரத்தை சுற்றிவிட்டு, நாளை காலை வயிற்றை தடவி பார்க்கக்கூடாது. அவசரமும் கூடாது. இயல்பாக அந்த சூழ்நிலையாகவே எப்பொழுதும் மாறிவிடவேண்டும். ஒரு சில சூழ்நிலைகளை கூறுகிறேன்.

பயணிக்கும் பொழுது, அவசர ஊர்தி சென்றால் "இறைவா! யார் என்றறியேன்! போதும் அவர்கள் கர்ம வசத்தால் வேதனை அடைவது. ஒன்று, குணப்படுத்திவிடு, இல்லையேல், மோக்ஷத்தை கொடுத்துவிடு" என வேண்டிக்கொள். மற்றவை இறைவன் தீர்மானத்துக்கு விட்டுவிடு.

போகும் வழியில் ஏதேனும் ஒரு ஜீவன் உடலை நீத்திருந்தால் "இந்த உடலில் இருந்த ஆத்மாவுக்கு மோக்ஷத்தை கொடுத்துவிடு. போதும் மறுபடியும் பிறப்பை கொடுத்து விடாதே! உன் பாதத்தில் பிடித்து வைத்துக் கொள்!" என வேண்டிக்கொள்.

ஏதேனும் இடத்தில் உயிரினங்களை வதைத்து உணவு வியாபாரத்துக்காக வைத்திருந்தால் "இறைவா! இந்த மனிதர்களுக்கு நல்ல புத்தியை கொடு. இங்கு உயிரிழந்த அனைத்து ஆத்மாவுக்கும், இனி மறு பிறப்பை கொடுக்காதே! இவர்கள் செய்கிற தவறுகளை மன்னித்து, திருத்தி, காத்தருள்!" என வேண்டிக்கொள்.

இயற்கையை, பஞ்ச பூதங்களை அழிக்கிற சூழ்நிலையை கண்டால், "இறைவா! காப்பாற்று! மனிதர்களுக்கு நல்ல புத்தியை கொடு!" என வேண்டிக்கொள்.

மருத்துவமனையை கடந்து செல்லும் பொழுது, அனைவரையும் சீக்கிரம் குணப்படுத்தி விடு, இறைவா" என வேண்டிக்கொள்.

பேராசை படுகிற மனித சூழ்நிலையை கண்டால், "இறைவா! சீக்கிரமே நல்ல புத்தி கிடைக்கட்டும் இவர்களுக்கு" என்று வேண்டிக்கொள்.

கோவில்களுக்கு, புண்ணிய ஸ்தலங்களுக்கு, மகான் சமாதிகளுக்கு சென்றால் "லோகம் க்ஷேமமாக இருக்கட்டும்" என்று வேண்டிக்கொள்.

இப்படி, தன்னலம் கருதாமல், எப்பொழுதும், பொது நலம் கருதி பிரார்த்தனை செய்யச்செய்ய, உன் கர்மா வேகமாக கரையும், உடல், மனம் சுத்தமாகும், இந்த உலகில் மனிதனாக பிறக்க விதிக்கப் பட்ட தண்டனை காலத்தை விரைவில் கடக்கலாம், ஆத்மா வேகமாக பல நிலைகளை கடந்து மிக, மிக சுத்தமாகும். அப்படிப்பட்ட நிலையில், ஒரு சூழ்நிலையை கண்டு, "ஓம்" என மனதுள் நினைத்தாலே, உடனேயே இறைவன் அந்த பிரார்த்தனையை நிறைவேற்றி விடுவான். இதுதான் எளிய வழி, என கூறி நிறுத்தினார்.

மனிதர்கள், இந்த சூழ்நிலைகளை, இறைவன், அவர்கள் முன் கொண்டு போட்டாலும் புரிந்து கொள்வதில்லை, என்பதே நிதர்சனம்.

மற்ற மூவரும் "மிகத் தெளிவாக, இயல்பாக சித்த மார்கத்தை விவரித்தீர்கள்" என அவருக்கு புகழாரம் சூட்டினார்.

"இன்னும் கேள்வி இருக்கா?" என்பது போல் அந்த பெரியவர் அடியேனை பார்த்தார்.

"இருக்கிறது! அவற்றை நான் தெரிந்து கொள்வதற்கா மட்டுமல்ல, எத்தனையோ பேர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு உதவ வேண்டும்" என்றேன்.

"சம்மதம்! வெளியே கூறு" என்று சரியாக என் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டு அனுமதியை, பதிலளித்தார்.

அடியேன் அடுத்த கேள்வியை கேட்க தயாரானேன்.

சித்தன் அருள்................... தொடரும்!

No comments: