Thursday, June 21, 2018

சித்த மார்க்கத்தின் தொடர்ச்சி 12

"இதை, காலத்தின் கட்டாயம் என்று கூறலாமே" என்றேன்.

 "இல்லை! ஒருவனுக்கு என்ன தெரியவில்லை என்றுணர்ந்து, அதை இன்னொருவன் வியாபாரம் செய்கிறான்! அதை விடு! தொடங்கிய விஷயத்துக்கு வருவோம். ஒரு மனிதனின் மார்பு பாகத்தை "ஹ்ருதய கமலம்" என்பார்கள். த்யானத்தில், எவனொருவன், இறைவனை, தான் விரும்பிய ரூபத்தில் அங்கு அமர்த்தி மூச்சை உள்வாங்குகிறானோ, அவனுக்கு, ஒரு சில காலத்திலேயே, அவன் இருத்திய ரூபத்திலேயே இறைவன் அமர்ந்து இருப்பதை உணர்த்துவார், என்பது தெரியுமா? முடிந்தால், இறைவனின் எளிய ரூபமான "லிங்க ரூபத்திலேயே" முயற்சி செய்து பார். மார்பில், லிங்க ரூபம் உள்ளிருந்து வெளியே அழுத்துவது போன்று ஒரு சில காலத்திலேயே உணரலாம். சுழிமுனை வழி சஹஸ்ராரம் சென்று பார்த்த பெரியவர்கள், தசவாசலில், ஒரு லிங்கம் தலைகீழாக அமர்ந்து, ஆத்மாவை கரை ஏற்ற காத்திருப்பதை உணர்ந்தனர். அப்படின்னா! சிவபெருமானே, ஒவ்வொரு மனிதனையும் கரையேற்றி, தன்னையே வாகனமாக்கி, காத்திருக்கிறார், என்று கூறலாம் இல்லையா?" என்று புன் சிரிப்புடன் நிறுத்தினார்.

சற்று நேரம் அமைதியாக, ஆனால் ஆச்சரியத்துடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவரிடம் பின்னர் கேட்பதற்காக விலக்கி வைத்திருந்த கேள்விகளில் ஒன்று "தலை கீழ் லிங்கம்". இதை ஒரு சித்தர் கோவிலில் பார்த்திருக்கிறேன். ஆவுடை மட்டும் தான் மண்ணுக்கு மேலே தெரியும். பாணம், பூமிக்குள், புதைந்த விதத்தில் இருக்கும். அந்த லிங்கத்தை, அந்த விதமாக அமைத்ததே, ஒரு சித்தர்தான். அதை கண்டவுடன், இதன் அமைப்பே வித்யாசமாக இருக்கிறதே. இதன் வழி சித்த பெருமான் எதோ ஒரு செய்தி சொல்கிறாரே, என பல முறை யோசித்ததுண்டு. அந்த கேள்வியை அடியேன் இவரிடம் கேட்க்காமலேயே, கலந்துரையாடல் வழி மெதுவாக அந்த பெரியவர் விளக்கலானார். [அந்த சித்தர் கோவிலை பற்றி இன்னொரு நேரத்தில் தனி தொகுப்பாக, விளக்குகிறேன்!].

"என்ன? அப்படி ஒரு லிங்கத்தை கண்டவுடன், நடந்த நிகழ்ச்சிகளை ஆராய்ச்சி செய்து சென்ற உனக்கு விடை கிடைத்தது. ஆனால், உன் உண்மையான கேள்விக்கு பதில் இதுவரை கிடைக்கவில்லை! அல்லவா?" என்று கூறி என்னை, மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

சித்தன் அருள்................ தொடரும்!

சித்த மார்க்கத்தின் தொடர்ச்சி 11

சித்தம் நிலைத்துவிட்டால் ஒரு ஆத்மா, கரையேரத் தொடங்கிவிடும். அங்குதான் சித்த நிலையின் முதல் விதை விதைக்கப்படுகிறது. இதற்காக, ஒரு மனிதன், வெளியுலக தேடலை குறைத்துக் கொண்டு, தனக்குள்ளேயே ஏன்? எது? எப்படி? என்று கேள்விகளை எழுப்பி அமைதியாக, பொறுமையாக காத்திருந்தால் அனைத்தும் சரியானபடி விளங்கும். இவ்வுலகில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளிலும், காரண காரியங்களை புரிந்து கொள்ள முடியும். முன் ஜென்மத்தில் ஏதேனும் ஒரு நிமிடத்தில், சித்தர்களுடன் தொடர்பிருந்தால் தான், இந்த பாதையில் நடத்து செல்லவும் முடியும். ஒரு உண்மை தெரியுமா? இறைவனும், சித்தர்களும், தன் சேய்களிடம் பேச, தகவல் பரிமாற, அந்த ஒருவனை நேர்வழிப்படுத்த மிக மிக ஆவலாக உள்ளனர். மனிதனுக்குத்தான், நேரம் இல்லை. ஏன் என்றால், வாழ்க்கையில், அவன் கொடுக்கும் முக்கியத்துவத்தின் திசை வேறு வேறு புறமாக இருப்பதால்தான். எவனொருவன், தன் மனதை கட்டுப்படுத்தி, ஒரே நேர் கோடில் கொண்டுவந்து, சித்தத்தில் (உடலில் அது நம் புருவங்களுக்கிடையில் சுழுமுனையில் உள்ளது) நிறுத்துகிறானோ, அவனுக்கு அவர்கள் வாக்கு கேட்க்கும். அந்த வாக்கும் உண்மை என்று கண் முன் நடக்கும் பொழுது உணரலாம். நம்பிக்கை, நிறைய தனிமை தான் இதற்கு தேவை. தவம் செய்பவர்கள், காடு மலை, குகை என்று தனிமையான இடங்களை தேடிப்போவது, இதனால் தான். எத்தனையோ விஷயங்கள், தவத்தின் பின் நடந்தாலும், தவத்தின் முடிவு, தசவாசலை நோக்கித்தான் அழைத்துச் செல்லும்" என்று நிறுத்தினார்.

"இந்த தசவாசலை நோக்கிய பயணத்தை, சற்று விரிவாக கூறுங்களேன்" என்றேன்.

"ஒன்றை அடிப்படையாக மனதுள் வைத்துக்கொள். எத்தனைதான் இங்கு கூறினாலும், எதையுமே, அவனவன் உணர்ந்தால் அன்றி உணர முடியாது. சரிதானே!"

"ஆமாம்!"

"ஒரு குழந்தை பிறந்தவுடன், அதன் தலையை தொட்டு பார்த்திருக்கிறாயா?"

'ஆமாம்! பார்த்திருக்கிறேன்!"

"எப்படி இருக்கும் என்று கூறேன்?"

"தலையின் உச்சியில் ஓடு திறந்திருக்கும்! தோல் அதை மூடியிருக்கும். தடவினால், ஒரு சிறு பள்ளத்தை உணரலாம்!" என்றேன்.

"உண்மை! ஒரு குழந்தையின் பிறப்பின் வழி இறைவன், மறுபடியும், மறுபடியும், உடலால் வளர்ந்தவர்களுக்கு ஒரு செய்தியை தெரிவிக்கிறான்! என்னிலிருந்து பிரிந்த ஆத்மா, விதியினூடே வாழ்க்கையை நடத்தும் பொழுது, உடலை விட்டு நீங்கும் போது, இந்த தசவாசல் வழி வெளியே வந்தால், உனக்கு மோட்சம் என்று கூறுகிறான். ஒரு மனிதனின் தலை உச்சியை, பெரியவர்கள் "சஹஸ்ராரம்" என்று கூறுவார்கள். சித்தர்கள் "தசவாசல்" என்று கூறுவார்கள். ஏன் என்றால் ஒரு மனிதனின் உடலுக்கு உள்ளே செல்கிற வழிகள் ஒன்பது இயற்கையாகவே, இறைவன் கொடுத்தது. அத்தனையையும் கட்டுப்படுத்தி, அனைத்திலும் ஊறும் சக்தியை திரட்டி, பத்தாம் வாசலுக்கு செல்ல வேண்டும். அந்த திறந்த ஓடானது, பிறந்த ஒரு மண்டலத்துக்குள் மூடிவிடும். பெற்றவர்கள், அது வேகமாக இணைய வேண்டும், இல்லையேல் ஏதேனும் பிரச்சினை வந்துவிடும் உடலுக்கு என்று, எண்ணெய் தடவி குளிர வைப்பார்கள். அதுவும் குளிர்ந்து மிக குறைந்த காலத்திலேயே மூடிவிடும். ஒரு பிறப்பு காட்டித்தந்த அந்த பத்தாம் வாசலை நோக்கி, உள்ளிருந்து, கவனத்தால், மூச்சு காற்றால், தடவி, தடவி, சேர்ந்த மண்டையோட்டை கரைப்பதுதான், வாசி யோகத்தின் ஒரே முனைப்பு. இதற்கான முயற்சியை தொடங்கி நடந்து செல்லும் பொழுதே, மூச்சுக் கட்டுப்பாடு வந்துவிடும். இறைவன், சித்தர்கள், வெளியுலக விஷயங்கள், உள்ளிருக்கும் ரகசியங்கள், அரிய விஷயங்கள், என ஒவ்வொன்றாக அந்த ஒருவனுக்கு புலப்படத்தொடங்கும். காலம் செல்லச் செல்ல, அவனிடம் அத்தனை அரிய விஷயங்களும் சேர்ந்துவிடும். இத்தனையையும் சொன்னால் மனிதன் குழம்பிப் போய்விடுவான் என்றுணர்ந்ததால், சுருக்கமாக பெரியவர்கள் "மூக்கின் நுனியை கவனி! உள்போகும், வெளிவரும் மூச்சை கவனி" என்றார்கள். என்ன செய்ய! அதுவும், இப்பொழுது நல்ல வியாபாரமாக ஆக்கப்பட்டுவிட்டது." என்று புன்னகைத்தபடியே நிறுத்தினார். 

சித்த மார்க்கத்தின் தொடர்ச்சி 10

​​"முகம் மறக்க வேண்டும்" அட! நல்ல வார்த்தைகளாக இருக்கிறதே, இதுவரை  கேள்விப்பட்டதே இல்லையே! அதை சற்று தெளிவு படுத்துங்களேன்" என்றேன்.

தமிழில் அனைத்துமே நல்ல வார்த்தைகளாகத்தான் இருக்கிறது. அவற்றை எப்படி தொடுத்து மாலை ஆக்குகிறோம் என்பதில்தான், மனிதன் தன் கவனத்தை செலுத்தவேண்டும். எளிமையாக, அழகாக வார்த்தைகளை பேசினாலே, இறை சாந்நித்தியம் எங்கும் நிறைந்து நிற்கும். அதை பற்றி பின்னர் உரைக்கிறேன்.

"முகம் மறக்க வேண்டும்" என்பது ஒரு தவம். அதை எத்தனை எளிதாக விளக்க முடியுமோ, அப்படி கூறுகிறேன். முதலில், என் கேள்விக்கு பதில் கூறு. ஒரு மனிதனுக்கு எத்தனை முகம் இருக்கிறது? என்று நிறுத்தினார்.

மனிதனுக்கு ஒரு முகம் தானே இருக்கும், என்றேன்.

முகம் என்பது பௌதீகமாக பார்த்தால், மூக்கு, வாய், கன்னம், கண்கள், இரு செவி, நெற்றி, போன்றவைகள் சேர்ந்து இருக்குமிடம் என்று கூறலாம். ஆனால் ஒரு மனிதனுக்கு, நிறைய முகங்கள் இருக்கிறது. அவன் மனது, எண்ணங்கள், அவன் இருக்கும் நிலை, இவைகள் பல முகங்களை கொடுக்கும். இவற்றின் உந்துதலால், எதிரொலிக்கும் விதமாக அவன் தன் முகத்தை அவ்வப்போது மாற்றிக்கொள்கிறான். உதாரணமாக, அவன் சேய் "அப்பா" என்றழைத்தால், தகப்பனாக, மனைவி அழைத்தால், கணவனாக, தாய் தந்தை அழைத்தால் மகனாக, சகோதர, சகோதரிகள் அழைத்தால், சகோதரனாக, இன்னும் மாமனாக, சித்தப்பானாக, தாத்தாவாக, இப்படி எத்தனையோ முகங்களை அவன் பல சந்தர்ப்பங்களில் அணிய வேண்டி உள்ளது.

"முகம் மறப்பதென்பது" இந்த முகங்களை மட்டும் மறக்க வேண்டுமென்பதல்ல. அனைத்து வித, அவன் அணிந்து கொள்கிற முகங்களை மறக்க வேண்டும். முகமறியாதவர்கள் முன் கூட ஒரு முகத்தை (பாவத்தை) ஒருவன் அணிகிறான். அதையும் மறக்க வேண்டும். சுருங்கக்கூறின், அனைத்து ஆத்மாக்களையும் ஒரே பாவத்தில் பார்க்க வேண்டும் என்பதே இதன் தாத்பரியம். ஒருவனுக்கு உள்ள அனைத்து உணர்வுகளும், அனைத்திற்கும் உண்டு என்பதை உணர்ந்து, அதன் கூட, அனைத்தும் இறை தீர்மானத்தால் நடக்கிறது என்று உணர்ந்து, அமைதி காத்து, தேவையான பொழுது, யாரேனும் கேட்டால் நல்வழி காட்டி, நல்லதை செய்து, பலன் எதிர்பார்க்காமல், போய்க்கொண்டே இருக்க வேண்டும். அனைத்து ஆத்மாக்களுக்காகவும், ஒருவன் வாழவேண்டும். வெற்றி, தோல்வி, லாபம், இழப்பு போன்ற உணர்வுகளுக்கு ஆட்படாமல், நடப்பதை அதன் படியே ஏற்றுக்கொண்டு, முன்னேறவேண்டும். இப்படிப் பட்ட அனைத்து சூழ்நிலைகளிலும், தன்னை பரிசோதித்துக் கொண்டு, அதையே ஒரு தவமாக ஏற்று செய்பவனுக்கு, மனம் வசப்படும், சித்தம் கலங்காது, சித்த மார்க்கத்தின் தொடக்க நிலைகள், மிக எளிதாக மாறும். இதை கடந்து செல்பவர்களுக்கு, அடுத்த நிலைகளை, சித்த பெருமக்களே, கூட இருந்து காட்டுவார்கள். இப்போது கூறியதை, தூரத்திலிருந்து  பார்த்து, எங்கு நம்மை திருத்திக்கொள்ளவேண்டும் என்று, ஒருவன் சரியாக  தீர்மானிக்கிறானோ, அவனுக்கு "முகம் மறப்பதென்பது" மிக எளிதாகும். அந்த ஒருவனுக்குள் ப்ரம்மத்துவம் உருவாகும். அவனே "ப்ராமணனாகிறான்".

ஆத்மாவுடன், உணர்ந்து, சேர்ந்து இருப்பவனுக்கு, உயர்ந்த நிலையை தவிர வேறு எதுவும் இவ்வுலகில் கிடைப்பதற்கில்லை. உடலோடு சேர்ந்து விழைபவனுக்கு, அத்தனை கர்மாவும், வாசனையும் கடை வரை கூட வரும். அடுத்த ஜென்மத்திலும் தொடரும்.

"நீங்கள் கூறுவது உண்மை! ஆனால், உலக வாழ்க்கையில் சிறைப்பட்டு கிடக்கும் மனிதருக்கு, அதன் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறத்தான் வேண்டியுள்ளது! அப்போது, நீங்கள் மேற் கூறிய விஷயம் சாத்தியமா?" என்றேன்.

"ஏன் முடியாது? உலகியல் விஷயங்களை, கடமைகளை செய்ய வேண்டாம் என்று யாரும் கூறவில்லையே. அதற்கான முயற்சிகளும் தவறில்லையே. முயற்சி என்பது தர்மத்துக்கு  உட்பட்டதாயின், பெரியவர்கள் ஆசிர்வாதம் எப்பொழுதுமே கூட நின்று கரை ஏற்றும். அதர்ம வழி கூடாது என்று தான், மனிதர்களை தடுத்து நிறுத்துகிறார்கள். அதர்மத்தின் வழி சென்றால், வெற்றி நிச்சயம் என்று நினைக்கிற மனித மனதுக்கு, மிகப் பெரிய பாபத்தை சம்பாதித்துக்கொள்கிறோமே! நிறைய ஆத்மாக்களின் மனதை வருத்துகிறோமே, என்ற எண்ணம் கூட வருவதில்லையே.

இன்றும், தன் கடமையை சரிவர செய்து கொண்டு, நடப்பவைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு, இறை வழியில், சித்தர் வழியில் நின்று விலகாமல், குடும்ப வாழ்க்கையையும் சுமந்து கொண்டு, வாழ்கிற எத்தனையோ நல்ல ஆத்மாக்கள், இங்குள்ளனர். அவர்கள் விகிதம் மிகக் குறைவு என்பதே உண்மை. அதற்காக இல்லை என்று ஆகிவிடுவதில்லை.

இவைகளிலிருந்து விடுபட, சித்தம் நிலைக்க வேண்டும். சித்தம் நிலைத்தால், எது சேர்ந்தாலும், இழந்தாலும் ஒரே மனநிலையுடன் இருந்து, கர்மாவை சேர்த்துக்கொள்ளாமல் இருக்கலாம். முகம் மறக்கலாம்.

சித்தன் அருள்.................. தொடரும்.

சித்த மார்க்கத்தின் தொடர்ச்சி 9

"அடியேன் அதற்கெல்லாம் இல்லை. உங்கள் விருப்பமே போதும்" என்றேன்.

'சிரித்துக் கொண்டே "பயந்துட்டயா!" என்றார்.

"உண்மை சொல்வதானால், ஆம்!" என்றேன்.

சட்டென்று "கண் மூடி தியானித்தால், உள்ளே பார்க்கலாம் என்றேனே, அதைத்தான் சித்தர்கள் "உள்பூசை" என்பார்கள். உள்ளே த்யானத்தில் பூசை செய்து, கோவில் கட்டி வாழ்ந்தவரை பெருமை படுத்தவே, தான் என்ன எதிர்பார்க்கிறேன் என்று இறை உணர்த்தவே, ஒரு அரசனுக்கு பாடம் புகட்டவே, அந்த முனிவருக்கு முதல் மரியாதை செய்தார், இறைவன். அந்த நிகழ்ச்சியை கேள்விப்பட்டிருக்கிறாயா?" என்றார் அவர்.

"ஆம் கேள்விப்பட்டிருக்கிறேன்! ஆனால் அதில் பூடகமாக நாம் அறிந்ததை விட உயர்வான ஏதோ ஒரு செய்தி, இருப்பதாக அடிக்கடி தோன்றும். ஆனால் அது என்ன என்று இதுவரை உணர முடியவில்லை" என்றேன்.

"ஆம் அது உயர்ந்த செய்திதான். அதை பார்க்க வேண்டுமானால், சற்று தள்ளி நின்று அந்த விஷயத்தை பார்க்க வேண்டும். அப்போதுதான் அது புரியும்" என்றார்.

"இதுதான் உண்மையை உணரவேண்டிய காலம் போலும். அதையும், தாங்கள் தெளிவாக உரைக்கலாமே" என்றேன்.

"த்யானத்தில் இருக்கும் ஒருவன், ஒரு நிலையில் தன்னை மறக்கிறான், தான் இருக்கும் சூழலை இழக்கிறான், எதை த்யானிக்கிறானோ, அதிலேயே ஒன்றி, அதுவாக மாறிவிடுகிறான். அவனை சுற்றி நடப்பவை எதுவுமே அவனை பாதிப்பதில்லை. அவன் கவனம் முழுவதும் அந்த ஒரு புள்ளியிலேயே. அந்த நேரத்தில், அவனுக்கு உடல் பற்றிய சிந்தனையே இல்லை. இந்த நிலையைத்தான் ஒரு மனிதன் அடையவேண்டும் என்பதே இறைவன் எண்ணம்.

உடல் பற்றி சிந்தனை இருப்பவனுக்கு, எல்லா அதிர்வுகளும் இருக்கும், அவை அவன் கவனத்தை பாதிக்கும். சற்று முன் அரவத்தை கண்டு நீ இருந்த நிலை. ஒரு நொடியில், உடலை பற்றிய சிந்தனை வந்த பொழுது, எத்தனை பெரிய ஆபத்தின் அருகில் அமர்ந்திருந்தேன் என்று சிந்தனை செய்தாய். மற்றவர்கள் அனைவரும், சகஜ நிலையில் இருந்தார்கள். எதுவுமே ஆபத்தாகவோ, அனுபவமாகவோ தோன்றவில்லை. ஏன்?" என்று கேள்வியை போட்டு நிறுத்தினார்.

"உங்கள் அனுபவம், ஒரே நிலையில் அதிராமல் தொடர்ந்து இருக்கும் மனநிலை காரணமாக இருக்கும்" என்றேன்.

"ஓரளவுக்கு நீ கூறியது உண்மையாயினும், நிரந்தர உணர்ந்த உண்மை என்பது, "அனைத்தும் இறைவன் விருப்பப்படியே நடக்கிறது என்பதனால்". அவன் எண்ணத்தை மீறி ஒரு அணுவும், இங்கு அசைவதில்லை. அவன் பார்த்துக் கொள்வான் என்கிற, திட நம்பிக்கை தான் காரணம். அந்த நிலை எய்தவனுக்கு மனம் ஒரே நிலையில் வசப்படும். பின்னர் எல்லாம் இயல்பாகவே தோன்றும்." என்றார்.

"அசையாத திட நம்பிக்கையை, அந்த திட நிலையை அடைய ஒரு சாதாரண மனிதன் எங்கு தொடங்க வேண்டும்! எதை பயிற்சி செய்ய வேண்டும்?" எனக் கேட்டேன்.

"ஏற்கனவே, நீ கேள்விப்பட்டதுதான். சித்த மார்கத்தில் முதல் பாடம் "முகம் மறக்க வேண்டும்" என்று கூறி நிறுத்தினார்.

சித்தன் அருள்...... தொடரும்!

சித்த மார்க்கத்தின் தொடர்ச்சி 8

"ஒரு நேர்முகத் தேர்வுக்கு சென்றால், வேலை கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகலாம். இல்லையா. அது போல் இறைவனிடம் வேண்டிக்கொண்டு சூக்ஷ்ம உடல்களை அவனிடமே, தாரை வார்த்துக் கொடுப்பதாக வைத்துக் கொண்டாலும், அதை ஏற்றுக் கொள்ள வேண்டுமா, வேண்டாமா என்கிற தீர்மானத்தை இறைவன்தான் எடுப்பார். எப்படி அந்தந்த கர்மாவை மன்னித்து கரைக்க வேண்டும், அல்லது எத்தனை ஜென்மத்தை குறைத்துக் கொடுக்கலாம், எந்தெந்த ஜென்மத்தில் எந்தெந்த கழிக்காத கர்மாவை அனுபவிக்க வேண்டும் என்றெல்லாம் பல நிலைகள் உண்டு. அத்தனை சூக்ஷ்ம உடல்களையும் ஏற்றுக்கொண்டுவிட்டாலும், இந்த ஜென்மத்தில் இருக்கும் மிச்ச கர்மாவை அனுபவிக்க வைத்துவிடுவார். இருப்பினும், கரைக்க முடியாத கெட்ட கர்மாவை, இந்த ஜென்மத்தில் அனுபவித்து விடட்டும் என்று சேர்த்துவிட தீர்மானித்தால், மிகப் பெரிய நோய்களும், பிரச்சினைகளும் வரலாம். ஆகவே, சூக்ஷ்ம உடல்களை ஒப்படைப்பவர், என்ன வரினும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். சூக்ஷ்ம உடல்களை ஒப்படைத்துவிட்டு, சறுக்கு மரத்தில் வழுகிச் செல்வது போல் இந்த ஜென்மாவை கடந்து போய்விடலாம் என்று யாரும் நினைக்க வேண்டாம். ஒரு சிறு துளி "கடன்" போலும் இல்லாமல் வாழும் ஆத்மாக்களுக்குத்தான், மோக்ஷத்திற்கு வாய்ப்பே. கவனிக்க - "வாய்ப்பு". அந்த துளி கூட இல்லாமல் இருப்பவர் யார் என்று நீ தேடினால், ஒருவர் கூட இந்த உலகில் அகப்படமாட்டார். புத்திக்கு எட்டிய வரை கடன், மனித உணர்வுக்கே எட்டாத கடன் என இன்னொன்றும் உண்டு. சுருக்கமாக சொன்னால், ஒரு தூசு அளவுக்கு கூட கர்மா ஒட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் எனத்தான், மனிதர்கள் விரும்ப வேண்டும். அதற்கும் ஒரு எளிய வழி, சித்த மார்கத்தில் உண்டு.

ஒரு மனிதனானவன் தினமும், ஒவ்வொரு நிமிடமும், ஏதேனும் கொடுக்கவோ அல்லது வாங்கவோ வேண்டும். அதுதான் அவன் விதி. இந்த கொடுக்கும், வாங்கும் நிகழ்ச்சிதான் அவனுக்கு சேர்கிற கர்மாவில் பெரும் பங்கு வகிக்கிறது. இது போக, அவன் எண்ணம். ஆசை. அவன் பார்வை போன்றவை, பலவித கர்மாக்களை ஒன்று சேர வைக்கிறது. அதையும் மீறி ஒருவன், நான் நேர்மையாகத்தான் வாழ்வேன் என்று தீர்மானித்து, நடந்து சென்றால், இவ்வுலக மனிதர்கள், அவன் தலை மீது அத்தனை குப்பை கர்மாவையும் கொண்டு கொட்டுவார்கள். கொட்டிவிட்டு போகட்டும், கொட்டப்படுவது, என்னுள் உறையும் இறை மீது என்று நடந்து சென்றால், கொட்டியவர்களே, திட்டி தீர்த்து, அவன் கெட்ட கர்மாவை வாங்கிக் கொள்வார்கள். அவன் ஆத்மா மற்றவர்களால்  வெகு எளிதில் சுத்தப்படுத்தப்பட்டுவிடும். அதுவும் குப்பை கொட்டியவர்களாலேயே! என்ன விசித்திரமான தண்டனை என்று பார், என்று நிறுத்தினார்.

"எதையும் சேர்த்துக் கொள்ளாமல் இருக்க வேண்டுமென்றால், எதையும் வாங்கும்போது "நாராயணார்ப்பணம்" என்று மனதுள் நினைத்துக்கொள்! எதையும் கொடுக்கும் பொழுது "சிவார்ப்பணம்" என்று கொடுத்துவிடு. எதுவும் உன்னை பற்றாது" என்றார்.

சட்டென்று "அட! மிக எளிதாக இருக்கிறதே, நல்ல வழிதான்!" என்று மனதுள் நினைத்தேன்.

இருப்பினும், "இதன் தாத்பர்யம் என்னவோ?" என்றேன்.

"வாழ்ந்து முடிக்கும் வரை அனைத்தும் நாராயணனுக்கு சொந்தம், அதனால், பெற்றுக்கொள்கிற பொழுது நாராயணார்ப்பணம்! கொடுக்கும் பொழுது பிறர் நன்றாய் வாழ அவர் வாழ்க்கைக்கு கொடுப்பதால், இருக்கும் வரை நல்ல படியாக வாழ்ந்துவிட்டு போகட்டும், பின்னர் சிவனிடம் தானே சென்று சேரப்போகிறது என்று உணர்த்தவே, கொடுக்கும்பொழுது "சிவார்ப்பணம்" என்று கூறி நிறுத்தினார்.

சற்று நேரம் எங்கும் அமைதி. எங்கும் பரவி நின்ற அமைதியை சற்று மென்மையாக கலைத்தபடி, தூரத்திலிருக்கும் கோவிலின் மணியோசை சன்னமாக ஒலித்தது. அமர்ந்திருந்த நால்வரும் அவர்கள் இருந்த இடத்திலிருந்து, எழுந்து நின்றனர். ஒருவர் கையால் உயர்த்தி காட்டவே, அடியேனும் எழுந்து நின்றேன்.

ஒரு நொடியில், பக்கத்திலிருந்த புதரிலிருந்து, ஒரு மிகப் பெரிய அரவம் வேகமாக மணியோசை வந்த திசை நோக்கி சென்றது. அதை கண்டு ஒரு நிமிடம். உறைந்து போனேன். முதுகில் ஏதோ தடவியது போல் உணர்வு வர, திரும்பி பார்த்தால், நால்வரில் ஒருவர், அடியேன் தோள்மீது, கைபதித்து மெதுவாக, "அமைதி" என்றார்.

அனைத்தும் ஒடுங்கிப்போய், சிலையாக பார்த்துக் கொண்டிருந்த பொழுது, மௌனத்தை கலைக்கும் விதமாக, "இறைவனின் பூசையை பார்க்க, அம்மா கிளம்பிட்டா. இனி நாம் நம் கலந்துரையாடலை தொடருவோம்" என அந்த பெரியவர் கூறினார்.

ஆச்சரியத்தை அடக்கிக்கொண்டு, "நாம் எல்லோருமே, அந்த கோவிலுக்கு சென்று பூசையை கண்டு வரலாமே" என்று கூறினேன்.

"இது இருக்கும் இடத்திலேயே இருந்து உணரவேண்டிய நிமித்தம் . துரத்தி சென்று வேடிக்கை பார்க்க வேண்டிய நேரம் அல்ல. இங்கிருந்தே கண் மூடி தியானித்தால், அந்த பூசையை உள்ளே காணலாம். துரத்தி சென்று பார்க்க முயற்சித்தால், திரும்பி எழுந்து நின்று தடை விதிக்கும் நேரமாக மாறிவிடும். 

Wednesday, June 20, 2018

சித்த மார்க்கத்தின் தொடர்ச்சி 7

சற்று நேர இடைவெளிக்கு பின் "ஒரு கோவிலில், இறைவன் பாதத்தில் விழுந்து சூக்ஷும உடல் சரணடைவதை பார்க்கும் பொழுது, "நீங்கள் எவ்வுரு கொண்டு, எங்கெல்லாம் கோவில்களில் அமர்ந்திருக்கிறீர்களோ, அங்கெல்லாம் அந்த சூக்ஷும உடல்கள் இதே நேரத்தில் உங்களை வணங்குகிறது. அதன்  வழி அடியேனின் நமஸ்காரத்தை தெரிவிக்கிறேன். அத்தனை உடல்களையும் நீங்கள் ஏற்றுக்கொண்டு விடுங்கள். மறுபிறப்பு வேண்டாம்" என வேண்டி பல உடல்களை இறைவனிடம் திருப்பி ஒப்படைத்து விடலாமே! இல்லையா?" என்றார்.

"அட! ஆமாம்! மிக எளிய யோசனை ஆயிற்றே! இது மட்டும் உண்மையாயின், மனிதனுக்கு வாழ்க்கை பயணத்தை கடப்பது மிக எளிதாயிற்றே. இத்தனை சண்டை, சச்சரவு, வாழ்வதற்கு போட்டி என, நிறைவேறாத ஆசைகளை, வாசனைகளாக சேர்த்து வைத்து துன்பப்பட வேண்டாமே!" என்றேன்.

"மனிதனுடைய சந்தேக எண்ணம்,  நம்பிக்கையின்மை, இதெல்லாம் சாத்தியமா! என்கிற அவநம்பிக்கை, வெளியுலக விஷயங்களில் உள்ள ஆர்வம், ஆசை  போன்றவைதான் அவனுக்கு தடையாக உள்ளது. இந்த மாதிரி எளிய விஷயங்களை கூட தனிப்பட்ட முறையில் நடை முறைப்படுத்தி பார்க்காமல் இருக்கும் மனநிலை தான் காரணம்".

"சரி! யாரோ ஒருவர் இதை நம்பி நடை முறைப்படுத்தித்தான் பார்த்து விடுவோமே என்று இறங்கினால், அவரை அந்த இறையே சோதிக்க நினைக்கும் மிகப் பெரிய ஆபத்தும் இதில் உண்டு" என்று நிறுத்தினார்.

"இறை சோதனை மிகுந்த ஆபத்தாக", என்றால் என்ன அர்த்தம்? நடந்து செல்ல வழியையும் காட்டிவிட்டு, ஆபத்து என்று கூறி பயமுறுத்துகிறீர்களே! அப்புறம் எப்படி ஒரு சாதாரண மனிதன் இந்த வழியில் எல்லாம் இறங்குவான்? பிறகு மனிதன் சரியில்லை என்று எப்படி நீங்கள் குறை கூறலாம்? என்று சற்று காட்டத்துடன் கேள்வியை எழுப்பினேன்.

"எல்லாம், எளிதாக, இலவசமாக கிடைக்க வேண்டும் என்று ஒரு சாதாரண மனிதன் நினைக்கலாம். சித்த மார்கத்தில் வருபவர்கள், அந்த நிலையை அடைந்தவர்கள், எப்படிப்பட்ட சோதனைகளை கடந்து வந்தவர்கள் என உனக்கு புரியாது. அவர்கள் அனைவரையும், இறைவன் சோதித்து, திசை திருப்பி, புடம்போட்டு தங்கமாக மாற்றியுள்ளான்.

"நீரில் மூழ்கினும், நஞ்சு என்னை தீண்டினும், நாமம் உரைப்பது "நமச்சிவாயமே" என எதற்கும் கலங்காதிருந்தவருக்குத்தான் சிவபதம் கொடுத்துள்ளான் இறைவன். அந்த சோதனையில் ஒரு மிகச் சிறு அளவு சோதனை வைத்தாலும், இங்கிருக்கும் ஒருவரும், அந்த தேர்வை எழுத மாட்டீர்கள். அப்படிப்பட்ட நீங்கள், இந்த விஷயங்களில், கேள்வி கேட்பதற்கே அருகதையற்றவர்கள்", என மிக நிதானமாக, தெளிவாக கூறினார்.

அமைதியாக இருந்த என் மனதில் "சரிதான்! போச்சுடா! தவறாக ஏதாவது பேசிவிட்டோமோ?" என்று தோன்றியது.

இதை அறிந்த ஒருவர், "நண்பர்களுக்குள் விவாதம் வரலாம்! தவறில்லை! முறை தவறி விடக்கூடாது, உரையாடலை தொடருவோம்" என சூழ்நிலையை சுமுகப்படுத்தி, மேலும் "அந்த இறை சோதனை ஆபத்தையும்" விளக்கிவிடுங்கள், என்று வழி மாற்றினார்.

சித்தன் அருள்................... தொடரும்!

சித்த மார்க்கத்தின் தொடர்ச்சி 6

"இனி சொல்வதை கவனமாக குறித்துக்கொள். எந்த ஒரு விஷயத்தையும் "மனம் உவந்து" பிறருக்கு கொடுத்தால்தான் அது அவர்களை சென்று சேர்ந்தாலும், பலனளிக்கும். ஏனோ, தானோவென்று, கொடுப்பது எதுவும், அது சென்று சேர வேண்டிய நிலையை அடைவதில்லை.  இறைவனிடம் பிரார்த்தனை வைத்தாலும், பல முறை அது நிறைவேறாமல் போகக் காரணமே, "சொல்லிட்டாங்க! அதுனால செய்கிறேன். நிறைவேற்றிக்கொடு" என்கிற மனப்பான்மையுடன் 99% மனிதர்களும் நினைத்துக் கொள்வதுதான். மனிதனை சொல்லிக் குற்றமில்லை. அவனோ கலியின் பாதிப்பில் இருப்பவன், இவ்வுலக பௌதீக விஷயங்களை பார்த்து, நம்பி, அதன் வழியே நடந்து வந்தவன். அதனால் முழு மனதுடன், நம்பிக்கையுடன் எதையும் செய்வதில்லை. உலக பௌதீக விஷயங்களில் உடன் பலன் கிடைக்கும் என்று உணர்ந்தால், எத்தனை வேகமாக, நம்பிக்கையுடன் செய்கிறானோ, அந்த நம்பிக்கையுடன் இனி கூறுபவற்றை செய்து பார்க்கட்டும். நிச்சயம் பலனளிக்கும்."

"நீ செல்லும் வழியில் ஒரு கோவில் இருந்தால் என்ன செய்வாய்?"

"கோவில் உள் சென்று இறைவனை, தரிசித்து, பிரார்த்தனை செய்து செல்வேன்" என்றேன் நான்.

"நீ வழியே செல்லும் பொழுது, இறங்கி, உள்சென்று இறைவனை தரிசிக்க நேரமில்லை, என வைத்துக்கொள். அப்பொழுது, உன் பிரார்த்தனை சூழ்நிலை எப்படி இருக்கும்? என்றார்.

இவர் எது வழியோ வந்து என்னை கவ்வ வருகிறார், என புரிந்தது.

"அப்படிப்பட்ட நிலையில், கோவிலின் வெளியே நின்று, மனதால் இறைவன் பாதத்தை, உருவத்தை தியானித்து "எல்லா ஜீவன்களையும் காப்பாற்றி, அருள் புரியுங்கள் இறைவனே" என வேண்டிக்கொள்வேன்" என்றேன்.

"பரவாயில்லை! நல்ல வேண்டுதல்தான். இருப்பினும், அப்பொழுது, அங்கு நீ பிரார்த்திக்கும் அந்த நிமித்தத்தில், என்ன நடக்கிறது என பார்த்ததுண்டா? இல்லை, கவனித்ததுண்டா?" என்றார்.

"ஒரு சிலவேளை, அப்படி பிரார்த்திக்கும் பொழுது, என்னைப் போல் ஒரு மனித உருவம், இறைவன் காலடியில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதை பார்த்திருக்கிறேன். அந்த நேரங்களில், இது என் மனம் உள்ளுக்குள்ளே அப்படி ஒரு உருவத்தை தோற்றுவிக்கிறது. உண்மையாகவே அப்படியெல்லாம் கிடையாது" என எண்ணிக்கொண்டு சென்றுவிடுவேன்.

சற்று நேரம் என் கண்களையே உற்று நோக்கிய படி இருந்தார், அந்த பெரியவர்.

பின்னர், அந்த உற்று நோக்கலை கலைத்துவிட்டு, மற்ற பெரியவர்களை பார்த்தபின், சிரித்தபடியே "நீ பார்த்தாயே அந்த உருவம்தான் எத்தனையோ சூக்ஷ்ம உடல்களில் ஒரு உடல். இங்கு மனதுள் நினைப்பதை அங்கே பதிவு செய்து கொள்ள காத்திருக்கும் உடல். நீ எங்கு சென்றாலும், உன்னை தொடரும் உடல்.

அங்கே  பாதத்தில் கிடக்கும் அந்த உடலை கண்டவுடனேயே, "இறைவா! இந்த சூக்ஷ்ம உடலை நீ எடுத்துக்கொண்டு விடு! எனக்கு வேண்டாம்! மறுபிறப்பை அறுத்துவிடு" என "ஆத்மார்த்தமாக" தாரைவார்த்துக் கொடுக்கலாமே. உன் அந்த நேரத்திற்கு, இறைவன் மனம் கனிந்தால், அந்த சூக்ஷும உடலுக்கு அளிக்கப்பட கர்மாவை, இறைவன் நினைத்தால் கரைத்து விடலாம், அல்லது வேறு சூக்ஷும உடலுக்கு மாற்றிவிடலாம். எல்லா கர்மாவையும் இறைவன் கரைத்து விடுவான் என்று கூறவில்லை. ஒரு சிலவற்றை இந்த ஜென்மாவிலேயே அனுபவித்துவிடு என விதிக்கவும் செய்யலாம். இதையே இன்னொரு விதமாகவும், வேகமாகவும் உடல்களை கரைத்து விட ஒரு வழியும் கூட உண்டு." என்று கூறி நிறுத்தினார்.

Friday, June 15, 2018

சித்த மார்க்கத்தின் தொடர்ச்சி 5

பிரார்த்தனையை சமர்ப்பிக்க கோவில்கள், மகான்களின் சமாதிகள், பல புண்ணிய இடங்கள் இருக்கிறது. எந்த அளவுக்கு நம் பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, என எப்படி புரிந்து கொள்வது?

"தனிப்பட்ட வாழ்வின், பிரார்த்தனைகள் என்றால், அதை புரிந்து கொள்ள காலங்கள் ஆகும். பிறருக்கென என்றால், ஒரு சில வேளை உடனேயே நம் கண் முன் நடப்பதை காணலாம். இதிலிருந்தே, எதற்கு, இறைவன் முக்கியத்துவம் கொடுத்து, உன்னை வழி நடத்துகிறான் என்று உணரலாம். பிரார்த்தனையை, மிக சிறந்த விஷயம் எனக் கூறக் காரணமே, பிறருக்கு பிரார்த்திக்கும் நிலைமையில், ஒரு மனிதன் தன் தேவைகளை மறக்கிறான். அந்த தன்னை மறந்த நிலையில், இறைவனே இறங்கி வந்து அவன் தேவைகளை பூர்த்தி செய்து விடுவான். லோகம் க்ஷேமமாக இருக்கட்டும் என பிரார்த்திக்கிற பொழுது, அந்த பன்மையான பரந்த நிலையில், நீயும் இந்த உலகத்தில்தானே இருக்கிறாய். உன் தர்மத்துக்கு உட்பட்ட பிரார்த்தனைகளும், காலப்போக்கில் நிறைவேற்றப் படும்.

ஒரு விஷயத்தை கூறுகிறேன். சரியாக புரிந்து கொள். கர்ம பாரத்தை குறைத்துக் கொள்ளத்தான் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். ஒரு மனிதனுக்கு எத்தனையோ உடல்கள் உள்ளது. இனி உள்ள ஜென்மங்களுக்கான சூக்ஷும உடல்கள் அனைத்தும் தயாராக உள்ளது. இங்கு நாம் பார்க்கும் பௌதீக, பஞ்ச பூத உடலுக்கு "ஸ்தூல" உடல் என்று பெயர். பஞ்ச பூத கலப்பில்லாத உடல்கள் அதனதன் இடத்தில் உள்ளது. இந்த உடலால் செய்யப்படுகிற விஷயங்களின் கர்ம பலனுக்குண்டான நிகழ்வை, இனி எந்த ஜென்மத்தில் அந்த ஒருவன்/ஒருவள் அனுபவிக்க வேண்டும் என இறைவன் தீர்மானித்து அந்தந்த சூக்ஷும உடலில், பதித்து விடுவார். நல்லது செய்தால் நல்ல பலன், தீயது செய்தால், தீய பலன். மறுபடியும், மறுபடியும் பிறவித் தளை. இது எதற்கு என்று மனிதன் யோசிப்பதில்லை. இந்த பிறவித்தளையிலிருந்து விடு பட என்ன செய்ய வேண்டும் எனக்கூட மனிதன் யோசிப்பதில்லை. நல்லது செய்தாலும், தீயது செய்யாமல் இருக்க வேண்டும். நன்மை, தீமை போன்றவற்றின் கர்ம பலனை இறைவனிடமே சமர்ப்பித்து விடவேண்டும். "எனக்கு நன்மையையும் வேண்டாம்/ தீமையும் வேண்டாம், இறைவா நீயே அனைத்தையும் எடுத்துக்கொள்" என்று வேண்டிக்கொள்ளவேண்டும். அவனிடமே, கொடுத்துவிடவேண்டும். இதை எத்தனை பேர் செய்கிறார்கள் என கவனித்துப் பார். அப்போது, நமக்கென காத்திருக்கும் உடல்கள் என்னவாகும் என்ற யோசனை வரும். என்ன செய்தால், அந்த உடல்களையும் தாரை வார்த்துக் கொடுத்து, பிறவித்தளையை விட்டு வெளியே வரமுடியும்? என்று யோசிப்பாய். அதற்கும் விடை, மிக எளிய ஆத்மார்த்தமான பிரார்த்தனையை இறைவனிடம் வைத்தாலே போதும்! அனைத்தையும் கழித்து விடலாம், எனக் கூறி நிறுத்தினார்.

பிரார்த்தனை வழி உடலை தாரை வார்த்து, பிறவித்தளை விலகி இறைவனோடு கலந்துவிடலாமா? தாங்கள் கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது, என்றேன்.

இந்த மாதிரி, எத்தனையோ எளிய வழிகள், சித்த மார்கத்தில் எங்கும் பரவிக் கிடக்கிறது. அதை புரிந்து கொள்ளத்தான், யாருக்கும் மனம் இல்லை! நேரம் இல்லை, என்றார்.

சித்தன் அருள்.......................... தொடரும்!



சித்த மார்க்கத்தின் தொடர்ச்சி 4

[வணக்கம் அகத்தியர் அடியவர்களே! இந்த தொடரில் தெரிவிப்பதெல்லாம், சித்த மார்கத்தில் சிறந்து விளங்குகின்ற, அனுபவத்தால் பழுத்த பெரியவர்களின் வாக்கு! யார் மனதையும் திருப்திப்படுத்துகிற அளவுக்கு, அடியேனால், எழுத முடியும் என்று தோன்றவில்லை. நம்முள் பல கேள்விகள் இருக்கலாம். எல்லா கேள்விகளுக்கும், நாம் விரும்புவதுபோல் பதில் இருக்கும் என்று அடியேன் நம்பவில்லை. உரைத்த உண்மையை அது போல் தெரிவிப்பது மட்டும் தான் அடியேனின் வேலை. இங்கு கூறுபவைகளை, நடை முறைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. குளத்தின் ஆழத்தை புரிந்து கொள்ள கரையிலிருந்தால் முடியாது. நீரினுள் இறங்கித்தான், அவரவர் உணரவேண்டும். அதற்கு, முதலில், "அகம்பாவம்" என்கிற ஆடையை கரையில் கழட்டி வைத்து, இறங்கி, ஆழம் அறிந்தபின், "அக்கரை" ஏறும் பொழுது, கௌபீனம் கூட வேண்டாம் என தோன்றும். அப்படித் தோன்றினால், அந்த ஆத்மா உணர்ந்துவிட்டது என்று அர்த்தம். இனி, இந்த வார தொடருக்கு செல்வோம்.]

"இந்த உடல் பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டது தானே! அப்படியிருக்க, பஞ்ச பூதங்கள் துணையின்றி ஒரு பிரார்த்தனையை சமர்ப்பிக்க முடியுமா? அனைத்திலும் அந்த பஞ்ச பூதங்களின் குணம் என்னவோ அதன் படித்தானே பிரார்த்தனையும் அமையும். உதாரணமாக இங்கிருப்பவர் பிரார்த்தனை உடன் பலனளிக்கும், வெளி நாட்டில் இருந்தால் எந்த கர்மா செய்தாலும் பலன் கிடைப்பதில்லை என பெரியவர்கள் கூறுவதின் அர்த்தம் என்னவோ?

நீ பிரார்த்தனையை கூறுகிறாயா? அல்லது கர்மா செய்வதை கூறுகிறாயா?

இரண்டும் வேறாகினும், ஒன்றுக்கொன்று தொடர்புள்ளது தானே!

ஆம்! இரண்டும் வேறு வேறு தான். ஆயினும் ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை. உன் கேள்வி புரிகிறது. பாரத கண்டத்தை கர்ம பூமி என்கிறார்கள். அங்கு செய்யப்படும் கர்மாக்கள், பிரார்த்தனைகள் எளிதில், விரைவில் நிறைவேறிவிடும். இந்த வித்யாசத்தோடு, ஏன் இறைவன் படைத்தான் என்று கேட்க வருகிறாய்! அப்படித்தானே!

அந்த படைப்பு ஒரு தெய்வ ரகசியம். ஏன், பாரத கண்டத்தை "கர்ம பூமி" என இறைவன் வரையறுத்து, மிச்ச இடங்களை போக பூமி என்று பிரித்தாளுகிறான் என பலருக்கும் புரியவில்லை. ஒரு வீடு கட்டினால், மனிதன், வாசல், திண்ணை, நடு அறை, மாடி, பின்புறம் என பல இடங்களாக பிரித்துக் கொள்கிறான்? அவன் வசதிக்காக, மேலும் சொல்லப்போனால், சமூகம் ஒப்புக்கொண்ட ஒரு முறை. அல்லவா. ஒரே கல் தான், ஒன்று படியாகிறது, இன்னொன்று தெய்வம் குடிகொள்ளும் சிலையாகிறது. ஏன் என்று, அந்த சிற்பியிடம் கேட்டால் என்ன சொல்வான். அது சிலைவடிக்கும், பக்குவம் கொண்டது. ஒன்று போதும், இன்னொன்று பக்குவம் இருப்பினும் படியாகட்டுமே என்று தீர்மானித்தேன், என்பான். அது போல், இறைவன் தேர்ந்தெடுத்த இடங்கள், ஒவ்வொரு குறிப்பிட்ட பக்குவம் உடையது. தெரிவு செய்வது, இறைவன் உரிமை. அதில் கேள்வி கேட்க்கும் உரிமை நமக்கில்லை, என்பதே உண்மை. இருப்பினும், மனிதனுக்கு சிந்திக்கும் அறிவு, கேள்வி கேட்க்கும் உரிமை இருக்கும் வரை, இந்த கேள்விகள் இருந்து கொண்டுதான் இருக்கும். இப்போதைக்கு, இந்த விஷயத்தில், இது வரை தெரிந்து கொண்டால் போதும்.


Tuesday, June 12, 2018

சித்த மார்க்கம் தொடர்ச்சி 3

ஒருவர், "இன்னிக்கு மாட்டிண்டார்! சரியா ஆணி அடிக்கப் போறார், பெரியவர்" என கூறினார்.

"எங்களுக்குள் பெரியவர் சின்னவர்  எல்லாம் இங்கு கிடையாது. அனைவரும் சமம். அது இருக்கட்டும். மனிதனை தவிர வேறு ஒரு சூழ்நிலையும் இங்கு கிடையாதா?"

பிற உயிரினங்கள், இயற்கை, நதி, பூமி, ஆகாயம், காற்று,அக்னி, இப்படி எத்தனையோ விஷயங்களை மனிதன் உபயோகப் படுத்திக்க கொள்கிறானே, அவற்றுக்கு உயிர் கிடையாதா? ஏன், அவை பேசாது என்று நினைக்கிறாயா?

இல்லை, அவை பேசும் மொழி மனிதனுக்கு கேட்பதில்லை, கேட்டாலும் புரியாது. புரிய வேண்டுமானால், அதெற்கென ஒரு நிலையை அடைய வேண்டும். அந்த நிலையை அடைய அவனுக்குள் ஒரு கனிவு எப்பொழுதும் சுரந்து கொண்டே இருக்க வேண்டும். அந்த கனிவு, வற்றாத ஜீவ நதியாக எல்லாவற்றையும் தழுவும் பொழுது, அவன் மாறும்பொழுது, அனைத்தும் கேட்கும், புரிந்து கொள்ள முடியும்.  ஆனால் மனிதனுக்கு எங்கே நேரம் இருக்கிறது? தன் சுய ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள, எதையும் அழித்து, எதையும் கீழடக்கி, தனதாக்கி கொள்ளத்தானே நினைக்கிறான். இதுதான் நான் முதலில் கூறிய 95%. இங்கிருக்கும் நாம் ஐந்து பேரும் 5% என்று ஒரு உதாரணத்துக்காக வைத்துக் கொண்டால், இந்த நிலை என்று 100% ஆகிறதோ அன்று 95% வென்று விடுவோம். ஆனால் அது என்று? சித்தர்களும்/முனிவர்களும், சித்த மார்க்க யோகிகளும் இன்றும், என்றேனும் 100% ஆகி, பின்னர் அந்த 100லேயே இருந்து மனிதனை மேலே எடுத்து செல்ல காத்திருக்கின்றனர். அதற்கான முதல் படியாக பிரார்த்தனையை கூறலாம்.

நீ சொன்ன சூழ்நிலைகளுடன், இனி கூறுகிற சூழ்நிலைகளையும் சேர்த்துக்கொள். விரைவில் உன் கர்மா கரைந்துவிடும், உடல் சுத்தமாகும், ஆன்மா மேல் நிலைகளை அடையும்! ஆனால் பொறுமை தேவை. இன்று அரச மரத்தை சுற்றிவிட்டு, நாளை காலை வயிற்றை தடவி பார்க்கக்கூடாது. அவசரமும் கூடாது. இயல்பாக அந்த சூழ்நிலையாகவே எப்பொழுதும் மாறிவிடவேண்டும். ஒரு சில சூழ்நிலைகளை கூறுகிறேன்.

பயணிக்கும் பொழுது, அவசர ஊர்தி சென்றால் "இறைவா! யார் என்றறியேன்! போதும் அவர்கள் கர்ம வசத்தால் வேதனை அடைவது. ஒன்று, குணப்படுத்திவிடு, இல்லையேல், மோக்ஷத்தை கொடுத்துவிடு" என வேண்டிக்கொள். மற்றவை இறைவன் தீர்மானத்துக்கு விட்டுவிடு.

போகும் வழியில் ஏதேனும் ஒரு ஜீவன் உடலை நீத்திருந்தால் "இந்த உடலில் இருந்த ஆத்மாவுக்கு மோக்ஷத்தை கொடுத்துவிடு. போதும் மறுபடியும் பிறப்பை கொடுத்து விடாதே! உன் பாதத்தில் பிடித்து வைத்துக் கொள்!" என வேண்டிக்கொள்.

ஏதேனும் இடத்தில் உயிரினங்களை வதைத்து உணவு வியாபாரத்துக்காக வைத்திருந்தால் "இறைவா! இந்த மனிதர்களுக்கு நல்ல புத்தியை கொடு. இங்கு உயிரிழந்த அனைத்து ஆத்மாவுக்கும், இனி மறு பிறப்பை கொடுக்காதே! இவர்கள் செய்கிற தவறுகளை மன்னித்து, திருத்தி, காத்தருள்!" என வேண்டிக்கொள்.

இயற்கையை, பஞ்ச பூதங்களை அழிக்கிற சூழ்நிலையை கண்டால், "இறைவா! காப்பாற்று! மனிதர்களுக்கு நல்ல புத்தியை கொடு!" என வேண்டிக்கொள்.

மருத்துவமனையை கடந்து செல்லும் பொழுது, அனைவரையும் சீக்கிரம் குணப்படுத்தி விடு, இறைவா" என வேண்டிக்கொள்.

பேராசை படுகிற மனித சூழ்நிலையை கண்டால், "இறைவா! சீக்கிரமே நல்ல புத்தி கிடைக்கட்டும் இவர்களுக்கு" என்று வேண்டிக்கொள்.

கோவில்களுக்கு, புண்ணிய ஸ்தலங்களுக்கு, மகான் சமாதிகளுக்கு சென்றால் "லோகம் க்ஷேமமாக இருக்கட்டும்" என்று வேண்டிக்கொள்.

இப்படி, தன்னலம் கருதாமல், எப்பொழுதும், பொது நலம் கருதி பிரார்த்தனை செய்யச்செய்ய, உன் கர்மா வேகமாக கரையும், உடல், மனம் சுத்தமாகும், இந்த உலகில் மனிதனாக பிறக்க விதிக்கப் பட்ட தண்டனை காலத்தை விரைவில் கடக்கலாம், ஆத்மா வேகமாக பல நிலைகளை கடந்து மிக, மிக சுத்தமாகும். அப்படிப்பட்ட நிலையில், ஒரு சூழ்நிலையை கண்டு, "ஓம்" என மனதுள் நினைத்தாலே, உடனேயே இறைவன் அந்த பிரார்த்தனையை நிறைவேற்றி விடுவான். இதுதான் எளிய வழி, என கூறி நிறுத்தினார்.

மனிதர்கள், இந்த சூழ்நிலைகளை, இறைவன், அவர்கள் முன் கொண்டு போட்டாலும் புரிந்து கொள்வதில்லை, என்பதே நிதர்சனம்.

மற்ற மூவரும் "மிகத் தெளிவாக, இயல்பாக சித்த மார்கத்தை விவரித்தீர்கள்" என அவருக்கு புகழாரம் சூட்டினார்.

"இன்னும் கேள்வி இருக்கா?" என்பது போல் அந்த பெரியவர் அடியேனை பார்த்தார்.

"இருக்கிறது! அவற்றை நான் தெரிந்து கொள்வதற்கா மட்டுமல்ல, எத்தனையோ பேர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு உதவ வேண்டும்" என்றேன்.

"சம்மதம்! வெளியே கூறு" என்று சரியாக என் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டு அனுமதியை, பதிலளித்தார்.

அடியேன் அடுத்த கேள்வியை கேட்க தயாரானேன்.

சித்தன் அருள்................... தொடரும்!

சித்த மார்க்கம் தொடர்ச்சி 2

நாம் கண்டுகொள்ள தவறுகிற எளிய விஷயங்கள் இவ்வுலகில் எத்தனையோ கோடி உண்டு. எப்படியெல்லாம் ஒரு விஷயத்தை நாம் அணுகுகிறோமோ, அதற்கு ஏற்றார் போல் நடக்கும் விஷயங்கள், விஷயங்களின் முகம் மாறுவதை நாம் காணலாம். சற்று முன் கூறினேன், பிரார்த்தனை என்பது இறைவன் மனிதனுக்கு அளித்த வரம், அதன் வழி தன் கர்மாவை கழித்து, உடலை தூய்மையாக்கி, ஆத்மாவை உயர் நிலைக்கு அழைத்து செல்ல ஒரு மனிதன் உபயோகப் படுத்திக் கொள்ளலாம் என. ஏன், இதே பிரார்த்தனையை, இறைவன் ஒருவனுக்கு கொடுக்கிற தண்டனையாக கூட எடுத்துக் கொள்ளலாம். இல்லையா? எனக்கூறி ஒரு இடைவெளி விட்டார்.

ஏதோ ஒன்று புரிகிற மாதிரி இருந்தது. தெளிவாக இல்லாததால் பதில் கூறாமல் அவர் தொடரட்டும் என்று காத்திருந்தேன்.

எத்தனையோ ஜென்மமாய் ஒவ்வொரு ஆத்மாவும் கரையேறி தன்னை வந்து அடையட்டும் என்று விரும்பி, பல சூழ்நிலைகளை கொடுத்து, அங்கேயே பிரார்த்திக்க தொடங்குகிறானா? என்று இறை காத்திருந்து பார்த்து, அது நடக்காமல் போகவே, மறுபடியும் பரீட்ச்சை வைத்து தேர்வடைகிறானா என்று பார்க்கிறது. பள்ளிக்கூடத்தில் வாத்தியார் 100 முறை எழுது என்று தண்டனை கொடுப்பது போல், இறையும். இன்னும் ஒரு முறை எழுது என ஜென்மத்தை கொடுத்து காத்திருக்கிறது. இனி ஒரு ஜென்மம் என்பது எவரும் விரும்பாதது தானே. தேர்வில் வென்றால் தானே கைலாச வாசம்/வைகுண்ட வாசம்.

சரி! நீ கேட்ட விஷயத்துக்கு வருவோம். உன் கண் முன் விரிந்த, உனக்கு புரிந்த பிரார்த்தனை பண்ண வேண்டிய சூழ் நிலைகளை, நீ கவனித்த படியே கூறு, என்று கேள்வியை அடியேனிடம் திருப்பி போட்டார்.

சற்று நேரம் யோசித்து, முன் ஜாக்கிரதையுடன் சொல்லத் தொடங்கினேன்.

அடியேன் கூறுவது சரியா, தவறா என்று தெரியவில்லை. இருந்தும் கூறுகிறேன்.

உடல் நலக்குறைவால் வாடுபவர்கள், வேறு வழியின்றி உயிர் வாழ யாசகம் செய்பவர்கள், பசியால் வாடுபவர்கள், குடும்ப பாரத்துடன் அதன் பிரச்சினைகளை சுமப்பவர்கள், என பல மனித சூழ்நிலைகளை அடியேன் எதிர் கொண்டுள்ளேன், எனக் கூறி நிறுத்தினேன்.

சபாஷ்! அப்படியென்றால், உன் பிரார்த்தனையை மனிதர்களுடன் நிறுத்திக் கொண்டாய் அல்லவா, என ஒரு புன்சிரிப்புடன் கேட்டார்.

இந்த கலந்துரையாடல் எங்கு செல்கிறது என்று உணர்ந்த மற்ற மூவரும், சற்று சத்தமாகவே சிரித்து, அர்த்த புஷ்டியுடன் ஒருவருக்கொருவரை பார்த்துக் கொண்டனர்.

சித்த மார்க்கம் தொடர்ச்சி 1

இந்த வார தலைப்பு "பிரார்த்தனை"

அடியேனின் கேள்வி: "அய்யா, அகத்தியப் பெருமான் "பிரார்த்தனையை" விட மிகச்சிறந்த, உயர்வான விஷயம் இந்த உலகில் இல்லை" என்று உரைத்துள்ளார். இதை விரிவாக கூறுங்களேன்!" என்றேன்.

அவர்கள் அனைவரின் பதிலையும் ஒன்று சேர்த்துள்ளேன்.

"இறைவன், ஒரு மனிதன் தன்னை, தன் கர்மாவை சுத்தப்படுத்திக் கொள்வதற்காக அளித்த வரம்தான் "பிரார்த்தனை". இதை இரு வகையாக பிரிக்கலாம். 1.பிரார்த்தனை - தனக்காக; 2. பிரார்த்தனை - பிற ஆத்மாக்களுக்காக. இந்த கலியுகத்தில், 95% பேரும் தனக்காக வேண்டித்தான் பிரார்த்திக்கிறார்கள். மீதி 5% பேர்கள்தான் சித்தர்கள் சொன்ன பிரார்த்தனையை புரிந்து கொண்டு, அதன் படி செய்கிறார்கள். இப்படி, ஒரு மிகப் பெரிய ஒரு குறை இருக்க, இரண்டாவது குழுவில் இருக்கிற மனிதர்களை மட்டும் கூட்டு சேர்த்துக் கொண்டு, எப்படியப்பா இந்த உலகை காப்பது. இன்று இங்கு நடக்கும் அத்தனை துர் நிகழ்ச்சிகளுக்கும் காரணம், மனிதனின் பேராசை. சரி அதை விடு, இறைவன் பார்த்துக்கொள்வார்.

பிரார்த்தனை எப்படி இருக்கவேண்டும்? மிக இயல்பாக, எளிதாக, ஒரு குழந்தை தன் தகப்பனிடம் தனக்கு பிடித்த இனிப்பை கேட்பது போல், (குழந்தைக்கு தெரியும், தன் தகப்பனிடம் உரிமை இருக்கிறது என்று) பற்றின்றி, தனது உறவாக இருந்தாலும், "இவர்கள் அனைவரும் உன் குழந்தைகள், கர்மபலனால் உறவாக, நட்பாக பிறவி எடுத்துள்ளார்கள்" என ஒரு முகமறியாத ஆத்மாவுக்கு வேண்டுவதுபோல், உறவாக இருந்தாலும், வேண்டிக்கொள்ளவேண்டும். மிக  சிரமமான நிலையில் இருப்பவர்களுக்கு வேண்டிக்கொள்கிற பொழுது, "எது அந்த ஆத்மாவுக்கு நல்லது என்று உனக்கு தோன்றுகிறதோ, அதை செய், அதையும் உடனேயே செய்" என வேண்டிக்கொள்ள வேண்டும்.

பிறருக்காக சமர்ப்பிக்கப்படும் பிரார்த்தனையினால், ஒருவன் தன் கர்மாவை கரைத்துக்கொள்கிறான், ஆத்மாவை சுத்தப்படுத்திக் கொள்கிறான், உயர் நிலையை நோக்கி நடக்கத் தொடங்குகிறான். அந்த ஒருவனின் பிரார்த்தனை நாள் செல்லச் செல்ல உடனேயே பலனளிக்கத் தொடங்கிவிடும். இந்த நிலைக்கு ஒரு ஆத்மா முன்னேறுவதற்கு தினசரி வாழ்க்கையிலேயே இறைவன் எல்லோருக்கும் வாய்ப்பளிக்கிறான். ஆனால், ஆரறிவு பெற்றவன் நான் என்று வாழ்கிற மனிதன் அந்த வாய்ப்புகளை புரிந்து கொள்வதில்லை/பிடித்துக் கொள்வதில்லை. உயர்ந்த நிலையை அடைகிற வாய்ப்பை இழப்பது மனிதர்கள், இத்தனை தெரிவித்தும் புரிந்து கொள்ளாததினால், வருத்தப்படுவது சித்தர்களும்/இறைவனும்.

கேள்வி: தினசரி வாழ்க்கையில் கோவில்களில், புண்ணிய ஸ்தலங்களில் பிரார்த்தனைகள் நடந்து கொண்டு தானே இருக்கிறது. ஏதோ மனிதன் அவனுக்கு தெரிந்ததை இறைவனுக்கு செய்கிறானே? அது போதாதா?

பதில்: நல்ல கேள்வி. மிகுந்த தாகத்தில் இருப்பவனுக்கு, ஒரு சொட்டு நீர் எப்படி போதவில்லையோ, அது போல் மனிதர்கள் செய்து கூட்டுகிற பாபங்களை கரைக்க போதுமான பிரார்த்தனைகள் இல்லை. 5% எப்படி 95% கடந்து முன்னேறும்?

உண்மைதான். தினமும், பிரார்த்தனையை இறைவனிடம் வைக்க என்ன செய்ய வேண்டும்? அது எப்படி இருக்க வேண்டும்? அப்படி சமர்ப்பிக்கப் பட்ட பிரார்த்தனைகள் எப்படி ஒரு ஆத்மாவை சுத்தம் பண்ணும்? சற்று தெளிவாக கூறுங்களேன் என்றேன்.

பதில்: இதுவும் நல்ல கேள்விதான்! இருப்பினும் ஒன்றை கேட்க விட்டுவிட்டாய். அது என்ன என்று யோசி, பார்ப்போம்.

சற்று நேர அவகாசம் கொடுத்தார்கள். எத்தனை யோசித்தும் என்ன விட்டு போனது என்று அடியேன் சிற்றறிவுக்கு புரியவில்லை.

"தெரியவில்லையே!" என்றேன்.

"தினமுமே இறைவன் பிற ஆன்மாக்களுக்காக பிரார்த்திக்க பல வாய்ப்புகளை தருகிறான்" என்றேனே! அந்த வாய்ப்புகளை, அனைத்தும் இல்லையென்றால், ஒரு சிலவற்றவையாவது உதாரணம் காட்ட, கேட்டிருக்கலாமே!' என்றார் ஒரு பெரியவர்.

"அட! ஆமாம்! இதை யோசிக்கவே இல்லையே!' என்று வெட்கி தலை குனிந்தேன்.

பின்னர் சுதாகரித்து "அதையும் சேர்த்தே கூறிவிடுங்களேன்" என்று பணிய,

அவர் விவரிக்கலானார். மற்றவர்கள் கூர்மையாக அவரையும், அவர் கூறுவதையும் கவனிக்கத் தொடங்கினர்.

அடியேனும்!

சித்தன் அருள்............ தொடரும்!

Thursday, June 7, 2018

அகத்தியன் அடிமை

                           
                  அன்பு உள்ளம் கொண்ட அணைத்து அன்பர்களுக்கும் அடியேனின் வணக்கம். சித்த மார்க்கத்தின் அறிவுரை என்ற தலைப்பில் அகத்திய பெருமான் அருளிய அறிவுரை. சித்தன் அருள் என்ற வலைத்தளம் மூலம் அடியேன் படித்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி வணக்கம் ஓம் அகத்தீசாய நம நற்பவி நற்பவி நற்பவி..