Friday, July 6, 2018

சித்த மார்க்கத்தின் தொடர்ச்சி 15

[தவத்திரு தங்கராசன் அடிகளார், இறைவனுடன் ஒன்று கலந்துவிட்டார் என கேள்விப்பட்டேன். அகத்தியருக்கும், அவர் அடியவர்களுக்கும், இறைவனுக்கும் எத்தனையோ உயர்ந்த தொண்டினை செய்து வந்தவர். அந்த புண்ணிய ஆத்மா இறைவனுடன் கலந்து மோக்ஷமடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்! இவ்வுலகில் அந்த ஆத்மாவுக்கு இனி ஒரு பிறவியை கொடுக்காதீர் இறைவா என அடியேன் மனம் வேண்டிக்கொள்கிறது! இனி எளிய அறிவுரைகளுக்கு செல்வோம்.]

அவர் மேலும் தொடர்ந்தார்.

இலக்கணமே, குறளாயிற்று!

தன் பசி, தன் வேதனை உணர்ந்தவனுக்குத்தான் அடுத்தவனுக்கு பசிக்கும், வலிக்கும் என்று உணர முடியும்.

தமிழை, முருகோனை தயையுடன் உபயோகியுங்கள். உங்கள் நாவில், வாக்கில் சுப்ரமண்யன் உறைவான். உங்களை எப்பொழுதும் சித்தர்கள் சுற்றி நின்று காப்பார்கள்.

வாழ்க்கை நன்றாய் அமைய, வாக்கில் தெய்வம் குடியிருக்க வேண்டும்.

உணர்வை கட்டிப்போட்டு, உயர்ந்த நிலைக்கு வழிமாற்று. ஆனால் எதையும் கட்டிப்போட்டு வளர்க்காதே! அது உனக்கு நீயே சேர்த்துக்கொள்ளும் எதிர்கால சிறைவாசம்!

சேர்த்துக் கொண்ட கர்மா, கரையக் கரைய, புற்றுமண் கரைந்து நாகம் வெளிப்படுவது போல், இறைவன் உன்னுள்ளே தோன்றுவான்.

அன்னம் தானமாயினும், அது நாராயண சேவை! ஆத்மா நீங்கிய உடல் அக்னிக்கு கொடுக்கினும், அது சிவபெருமான் சேவை.

இவ்வுலகில், நிலையானது என ஒன்றில்லை, இறைவதனைத்தவிர.

எண்ணம் இலை மறை காயாய் இருந்தாலும், இறை வாசம் இருந்தால்தான், கனியும்.

பஞ்சதாயன பூசையில் சுப்ரமணியன் எங்கு போனான் என்று தேடுபவனுக்கு, "பராபரம்" எளிதில் காட்டப்படும்!

சின்முத்திரை தத்துவமாகு; சிதறிய வாழ்க்கை, ஒன்று சேரும்!

நெல்மணியாய் விளைந்து நில், பவ்யமாய் வளைந்து நில். உன்னுள்ளே "அரிசிவமாய்" இறைவன் இருப்பான்.

எங்கும், இனிப்பே கசப்பானது, காரமே, புளிப்பானது.

வியாதிக்குள் கர்மா மறைந்திருப்பதுபோல், பசிக்குள் கர்மா தகிக்கப்படுகிறது. வயிற்றில் நித்தமும் கர்மா தகனம் நடக்கிறது.

இப்படி அவர் கூறிக்கொண்டே செல்லச்செல்ல, கேட்ட நானே அசந்து போனேன். அத்தனையும் ஞாபகத்தில் வைக்க முடியுமா என்ற  எண்ணம் தோன்றியது. அதை புரிந்து கொண்டாற்போல், சிரித்தபடியே நிறுத்தினார்.

"சரி! "தலை கீழ் லிங்கத்தைப்" பற்றி பார்ப்போம்!"  என்றார்.

"சிவயோகிகள், த்யானத்தில் அமர்ந்து, தங்கள் சஹஸ்ராரத்தில் இறைவன் திருவடியை தியானித்து இருப்பர். தியானத்தின் உச்சநிலையில், திருவடி மறைந்து ஒரு லிங்க ரூபமாக மாறும். மேலும் தொடர்ந்து த்யானத்தில் அமர்ந்திருக்க, அந்த லிங்கமானது, அவரின் உள் பாகத்தை நோக்கி, மெதுவாக திரும்பும். இதை "விளைதல்" என்றும் கூறலாம். பயிர் விளைந்து நெல் மணி தோன்றும் பொழுதுதானே தலை சாய்க்கத் தொடங்கும். அதுபோல் தவத்தின் வலிமை கூடக்கூட, இறைவனே மனம் கனிந்து, தன்னை தவசியின் பக்கம் திருப்பிக்கொள்கிறார் எனலாம். ஒரு காலத்தில், அந்த லிங்கம் "தலை கீழ் லிங்கமாக" முழுமையாக மாறியபின், அதிலிருந்து ஒரு நாழிகைக்கு, ஒரு சொட்டு என ஒரு அமிர்தம் அந்த உடலுக்குள் மழைத்துளி போல் வீழும். அந்த அமிர்தம் வீழ்ந்து, வீழ்ந்து, அந்த உடல் மிக மிக சுத்தமாகும். உடல் முழுவதும் அந்த அமிர்தம் பரவிவிட்டால், பின்னர் அவனுக்கு, சுவாசிக்க, காற்று கூட தேவை இல்லை. இதை முடிந்தால் முயற்சி செய்துபார் என சொல்லாமல், சொல்வதுதான் நீ பார்த்த ஸ்தூல "தலைகீழ் லிங்கம்". உன்னால் முடிந்தால் த்யானத்தில், சூக்ஷுமத்தில் "தலை கீழ் லிங்கத்தை" பார்க்க முயற்சி செய்து பார்" என மிகப் பெரிய விஷயத்தை சர்வ சாதாரணமாக, எளிதாகக் கூறினார்.

எத்தனையோ விஷயங்களை இத்தனை நேரம் கூறியிருந்தாலும், இது ஒன்றுதான் நடைமுறைப்படுத்துவது, மிக கடினமான ஒன்றாக இருக்கும் என என் மனம் கூறியது. இந்த வழிகளில் எல்லாம் நடந்து சென்று, விடாப்பிடியாக, திட மனதுடன் இருந்த மனிதர்கள் தான் பிற்காலத்தில் "சித்தர்களாக" மாறியிருக்கிறார்கள் என பல பெரியவர்கள் கூறியதை அப்போது நினைவு கூர்ந்தேன்.

[அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்! அடியேனுடைய குருநாதர் "முருகா" என்பவர், கடந்த சனிக்கிழமை அன்று இறைவனுடன் ஒன்றிக் கலந்துவிட்டார். அவரது இழப்பு, என்னுள் ஒரு வெறுமையை உருவாக்கிவிட்டது. எத்தனையோ நல்ல வழிகளை காட்டி, "நடந்து செல்! நான் இருக்கிறேன் கூட!" என்று வாழ்வை செம்மையாக்க வழிகாட்டியவர். மனம், உணர்வுகள் அனைத்தும் வெறுமை அடைந்துவிட்டது. ஒரு சில காலம் தனிமையாக இருக்க விரும்புகிறது. மனம் ஒன்று படும் போது, "சித்தன் அருளில்" தொடர்கிறேன். அதுவரை, சற்று விடை கொடுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்!]

சித்தன் அருள்................... நிச்சயமாகத் தொடரும்!


No comments: