Sunday, July 22, 2018

அகத்தீசா என்றால்

அகத்தீசா என்றால் :
புண்ணியவான்களுக்குத்தான் உண்மைப்பொருள் அறிந்தவனாகவும், பெருந்தன்மை உள்ளவனாகவும், தன்னை நாட்டிற்கு அர்ப்பணிக்கக்கூ
டிய சாது சங்க தொடர்பு கிடைக்கும்.
பாவிகளுக்கு பொருள் பற்று உள்ளவனாகவும், காமுகனாகவும், ஜாதி, மத, துவேசம் உள்ளவனாகவும், யான் என்ற கர்வம் உள்ளவனாகவும், யாரேனும் இடரிப் பேசினால் கொலையும் செய்யக்கூடிய பாவிகளான மகாபாவிகளின் நட்பு அமையும். போலியான ஆன்மீகத்தில் உள்ளவன் பொருள் பற்று உள்ளவனாக இருப்பான். பொருள் பற்று உள்ளவன் நிச்சயம் காமுகனாக இருப்பான். அவன் நிச்சயம் ஆன்மீக துரோகி. அவனால் நாளுக்கு நாள் மூடத்தனம் நாட்டில் மிகுதியாகும், பருவமழை தவறும், இயற்கை சீற்றங்கள் உருவாகும். இயற்கை சீற்றங்களாலும் பருவமழை தவறுவதாலும் விளைச்சல் குன்றி விவசாயம் அழிந்துபோய் உணவிற்கே பஞ்சம் ஏற்பட்டு வறுமை நாடெங்கும் தாண்டவமாடும்.
மக்கள் வளம் குன்றினால் அரசுக்கு வரவேண்டிய வருவாயும் குன்றிவிடும். போலி ஆன்மீகவாதிகளால் அரசு பலமிழந்துவிடும் என்பதை அறிந்து அகத்தீசனை வணங்க வணங்க உண்மை ஆன்மீகம் வளர்ந்து போலி ஆன்மீகவாதிகள் மக்களால் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு விலக்கப்படுவார்
கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
முற்றுப்பெற்ற ஞானிகளை முன்னிறுத்தி ஆதி ஞானத்தலைவன் முருகப்பெருமான் தலைவனாக உள்ள ஞானியர் வழிபாட்டினை அடிப்படையாகக் கொண்ட உண்மை ஆன்மீகம் பரவினால் நாடெங்கும் புண்ணியச் செயல்களும், ஞானியர் ஆசிகளும் வெகுவாக பெருகி இயற்கை சீராக இயங்கும், பருவமழை தவறாது, இயற்கை சீற்றங்கள் ஏற்படாது, தீடீரென ஏற்படும் பேரழிவுகள் ஏற்படாது, நல்லபடியாக விவசாயம் நல்ல விளைச்சலோடு நடைபெறும், மக்கள் நன்னெறி செல்வார்கள், மக்களிடத்து துவேசங்கள் குறைந்து காணப்படும், செல்வ வளம் பெருகும், விவசாயம் சிறக்கும், நாடெங்கும் அமைதியான சூழ்நிலை நிலவும், அரசு செம்மையாக ஆட்சி புரியும், அரசிற்கு வருவாய் மிகுந்து காணப்படுவதினால் நலத்திட்டங்கள் ஏராளமாய் செயல்பட்டு நாடெங்கும் சுபிட்சநிலை பெருகி நாடே சொர்க்கம் போல் காட்சி தரும் என்பதை அறிந்து அகத்தீசனை ஒவ்வொரு தனி மனிதனும் வணங்க வணங்க அந்த நாடே சுபிட்சமாகும் என்பதை அறியலாம்.
-மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்

Friday, July 20, 2018

சித்த மார்க்கத்தின் தொடர்ச்சி 17

அமைதியாக இருந்த சூழ்நிலையை மனம் உற்று நோக்கத் தொடங்கியது! நகரத்தின் இரைச்சலான சப்தத்தில் வாழ்ந்துவரும் எனக்கு, அந்த இடத்தின் சூழ்நிலை, சன்னமான குளிர்ந்த காற்று, சுற்றிலும் இருக்கும் காடு போன்ற அமைப்பு, பறவைகளின் சப்தம்,  தூரத்தில் புழுதியை கிளப்பிக்கொண்டு செல்லும் மாட்டு மந்தைகள், நேர் எதிரே உயர்ந்து வளர்ந்திருந்த மலை, இவை அனைத்தும் ஓர் அமைதியை உள்ளே நுழைத்தது. எதுவும் யோசிக்கவோ, பேசவோ தோன்றவில்லை. இயற்கையின் இயல்பே இதுதான் என்றால், மலையை தவிர மற்ற அனைத்தும் நான் வசிக்கும் இடத்தருகில் இருந்தும், ஏன் இந்த அமைதி வருவதில்லை? இரைச்சலான சூழ்நிலைதான் காரணமா?" என்று யோசித்தபின், சிறிது நேரம் த்யானத்தில் அமர்ந்தேன். எங்கோ இழுத்துச் சென்றது. நினைவு மழுங்கிப்போனது.

யாரோ தூரத்திலிருந்து "நமச்சிவாய" என்று கூப்பிடுவதை கேட்டு உணர்வு வந்து விழித்தெழ, நான்கு பேரும், என் முன்னே அமர்ந்திருந்தனர்.

"என்ன! த்யானத்துல ரொம்ப தூரம் போயிட்டேங்க போல? ஒரு நாழிகை என்றுவிட்டு, 45 நிமிடமாயிற்று நாங்கள் வர. மேலும் 15 நிமிடங்கள் பொறுத்து பார்த்துவிட்டுத்தான், உன்னை கலைத்தோம்!" என்றார்.

"எப்படி இருந்தது, த்யான சூழ்நிலை?" என்றார்.

"மிக அமைதியாக இருந்தது" என்றேன்.

"ஏன் நகரத்தில் இது அமைவதில்லை என்று தோன்றியிருக்குமே!" என்று அவரே கொக்கி போட்டார்.

"ஆமாம்!"

"மனித உடலில் இருக்கும் ஒரு ஆத்மா உணர்ந்தால்தான் உண்மை புரியும். இயற்கை என்று ஒன்று இருப்பினும், அதை இறைவனாகவே பாவித்து, தினமும் சில நேரம் த்யானத்தில், நல்ல எண்ணங்களை கதிர்வீச்சாக மனிதன் கொடுத்தால் தான், அதை வாங்கி பன் மடங்காக்கி, கேட்பவருக்கெல்லாம் அது கொடுக்கும். அதை உணர்ந்து வாங்கிக்கொள்கிறவன், தன்னையும், தன் சுற்றுப்புறத்தையும், தன் அருகே இருக்கும் அனைத்து ஆத்மாக்களையும் சுத்தம் செய்கிறான். இறைவனை அடைய நாங்கள் செய்கிற பயிற்சியாகட்டும், த்யானமாகட்டும், அனைத்தையும் இயற்கைக்கே தானம் செய்துவிடுகிறோம். எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. அனைவருக்கும் போய் சேரவேண்டும் என பிரார்தித்துக் கொள்வோம். நகரத்தில் வாழும் மனிதருக்கு, வாழ்க்கையின் இரைச்சல் நிறைந்த அவசரத்துக்கு, இந்த உண்மையெல்லாம் உணர்வதே கடினம். பின்னர் எப்படி தானம் செய்ய மனம் வரும். இந்த சூழ்நிலையை வித்யாசமாக, மனதுக்கு இதமாக நீ உணரக்காரணமே, இயற்கை தான். ஒவ்வொரு ஆத்மாவும், தான் அமைதியாக இருக்க வேண்டும் என்று விரும்புவது இயற்கை. ஆனால், தன் அமைதியை, எங்கிருந்து எடுத்துக் கொள்வது, என்று தீர்மானிப்பதில்தான், மிகப் பெரிய தவறு நடக்கிறது. அதில் மாட்டிக்கொள்வது, பிற ஆத்மாக்களும், பஞ்ச பூதங்களும். இவைகளை தோண்டித் துருவுவதை விட்டு, அவன் உள்ளே சென்று தோண்டித்துருவினால், உள்வெளிச்சம் கிடைக்குமே. நிறைய உண்மைகளை புரிந்து கொள்ளலாமே!" என்றார்.

"உண்மைதான்! ஆனால், மனிதன் வாழவேண்டிய வாழ்க்கைக்கான, தேடலில், இதை மறந்து விடுகிறான் போலும், எனக் கொள்ளலாமே" என்று கூறவும்,

"தேடுகிற பொருள் என்ன என்பதை அவன் தானே தேர்ந்தெடுக்கிறான். தேடுவது அனைத்தும், பௌதீக பொருளாக இருப்பதால், அவன் இந்த அளவுக்கு தன்னை வருத்திக்கொள்ள வைக்கிறது.  பசிக்கு இட்லி  சாப்பிட்டு பசியடக்குபவனும் இங்குதான் இருக்கிறான். காற்றை மட்டும் உண்டு உயிர் வாழ்கிற தவசியும் இந்த பூமியில் இருக்கிறான். இதில் இவர்கள் இருவருக்கும் உள்ள ஒரு மிகப் பெரிய வித்யாசம் என்னவென்றால், உணவு உண்டு வாழ்பவன், நிறைய பாப கர்மாக்களை சேர்த்துக் கொள்கிறான். தவசி, காற்றை உண்டு, வெறும் நீரை குடித்து இயற்கையோடு வாழ்ந்து, இயற்கையை சுத்தம் செய்கிறான்" என்றார்.

"இது என்ன! புது தகவலாக இருக்கிறதே! உயிர் வாழ இயற்கை கொடுக்கிற உணவை உண்கிறவன் பாபகர்மாவை சேர்த்துக் கொள்கிறானா? ஆச்சரியமாக இருக்கிறதே! சற்று விளக்குங்களேன்" என்றேன்.

"சொல்கிறேன்! நிதானமாக கேட்டு புரிந்து கொள்!" என்றார்.

சித்தன் அருள்............. தொடரும்!

சித்த மார்க்கத்தின் தொடர்ச்சி 16

[அனைத்து அகத்தியர் அடியவர்களுக்கும் வணக்கம். குருநாதனை இழந்த நேரத்தில் ஆறுதலாக வார்த்தைகளை கூறி மனதை ஒன்று படுத்த உதவியமைக்கு கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி அடியேனுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் பிரிவால் வந்த வெறுமை மட்டுமல்ல, பிறகு வந்த சடங்குகளில் பங்கு கொண்டு, கடமைகளை நிறைவேற்ற வேண்டி வந்ததால், நேரமின்மை ஏற்பட்டது. அவரது ஆத்மாவை வழிஅனுப்புகிற 10வது நாள் அன்று நமஸ்காரம் செய்து, லோகம் க்ஷேமமாக இருக்க எப்போதும் போல் அருகில் இருந்து வழி நடத்துங்கள், என மட்டும் வேண்டிக்கொண்டேன். அடியேனின் பிரார்த்தனை நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன். இனி "எளிய அறிவுரைகளுக்கு" செல்வோம்.]

"இந்த கலந்துரையாடலை, இங்கே நிறுத்திக்கொள்வோம். மீண்டும் நாளை தொடரலாம். ரொம்பவே இருட்டிவிட்டது. உனக்கான எளிய உணவு வழங்கப்படும். உண்டுவிட்டு, சற்று சயனித்திரு!" என்று கூறி நிறுத்தினார்.

அதுவே, அவர்களுடனேயே இரவு தங்குவதற்கான, அனுமதியாக எடுத்துக்கொண்டு, அவர்களுடன் அமர்ந்து உணவை உண்ணலாம் என்றால், ஆச்சரியம் காத்திருந்தது. அடியேனுக்கு மட்டும் உணவு பரிமாறப்பட்டது. அவர்கள், ஒரு டீயை பருகி முடித்துக் கொண்டனர். ஏன் இப்படி? என்ற கேள்வியை எழுப்ப மனம் வரவில்லை. எதோ ஒரு உணவு முறையை கடைப்பிடித்து, தவத்தில் ஆழ்பவர்கள் இருக்கிறார்கள். எது அவர்களுக்கு நல்லது என்று தெரியும், என்பதால், வேறு எதுவும் கேட்காமல், அமைதியாக எனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தலை சாய்த்தேன். மனதுள், அன்றைய தினம் நடந்த கலந்துரையாடலின் சத்தான விஷயங்களை அசைபோட்டு, அடுக்கத் தொடங்கினேன். சற்று நேரத்தில் உறங்கிப்போனேன்.

காலை கண் விழித்த பொழுது மணி 7 ஆகிவிட்டது. மிக அமைதியான உறக்கம் கிடைத்தது என உடல் உரைத்தது. எங்கே அனைவரும் என்று வெளியே வந்து பார்க்க, அனைவரும் வாசி யோகத்தின் பயிற்சியில் இருந்தனர். பெரியவர் மட்டும் த்யானத்தில் அமர்ந்திருந்தார்.

மெதுவாக அருகில் சென்று நிற்க, கண் திறந்தார்.

"நமஸ்காரம்" என்றேன்.

"திருச்சிற்றம்பலம்" என்றார்.

"நீ போய் காலை கடன் கழித்து, குளித்துவிட்டு வா!" என்று வழி காட்டினார்.

கிணற்று நீர்! அப்படி சில்லென்று இருந்தது. பாதத்தில் தொடங்கி தலை வரை விட்டதும், மிகுந்த புத்துணர்வு!

குளித்து முடித்து அவர் முன் வந்ததும், ஒரு சிறு துணிப் பையை தந்து, "இதில் விபூதி உள்ளது. நெற்றிக்கு பூசிக்கொள்ளும் பழக்கம் இருந்தால் எடுத்துக்கொள்!" என்றார்.

சிறிது விபூதியை எடுத்து இடது கையில் வைத்துக் கொண்டு, பையை அவரிடம் கொடுத்துவிட்டு, மறுபடியும் கிணற்றின்கரை வந்து, நீர் விட்டு குழைத்து, நெற்றியிலும், உடலிலும் பூசிக்கொண்டேன். மிகுந்த மணம் பரவியது. இது ஏதோ ஒரு கோவிலில் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்த விபூதியாகத்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

"எம் குருநாதன் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்த விபூதி அது! உனக்கும் அவர் அருள் இருக்கிறது என்று பொருள்!" என்று கூறி, "அதெப்படி, விபூதியை தந்ததும், நீரில் குழைத்து பூசிக்கொள்ளத்தோன்றியது?" என்றார்.

"அய்யா! முதலிலிருந்தே, குளித்தவுடன், நெற்றிக்கு இட்டுக்கொள்வதென்றால், நீரில் குழைத்துத்தான் பழக்கம்! பலரும், அப்படியே இட்டுக்கொள்வதை பார்த்திருக்கிறேன். நீரில் கரைத்து இட்டுக்கொண்டால், நீண்ட நேரம் அழியாமல் இருக்கும் என்று தோன்றுவது உண்டு" என்றேன்.

மற்ற மூவரும், இதற்குள் பயிற்சியை முடித்து வர, அதில் இளையவரை நோக்கி பெரியவர் "போய்வா" என்பது போல் தலையசைத்தார். அவரும் எங்கோ இறங்கிப்போனார்.

"பொதுவாக, சித்த மார்கத்தில் நடந்து செல்பவர்கள், திருநீறை குழைத்துத்தான் இட்டுக் கொள்வார்கள். உனக்கு இது யார் வழியினும் தீக்ஷையாக கிடைத்ததோ, எனத் தெரிந்து கொள்ளத்தான் கேட்டேன்" என்றார்.

"தினமும் நெற்றிக்கு பூசிக்கொள்ளும் பொழுது, மனதுள் ஓம் நமச்சிவாயா! என்றுரைத்து, நான் இதுவாகத்தான் போகிறேன், என் அகந்தையை அழித்துவிடு, உள்ளே நீ குடியிரு! உணரவை!" என்று வேண்டிக்கொள்" என்றார்.

 "மிக்க நன்றிங்க! தினமும் செய்கிறேன்!" என்றேன்.

"சற்று நேரம் இங்கேயே இரு. ஒரு நாழிகைக்குள் வருகிறேன்" என்று கூறி மற்ற இருவரையும் அழைத்துக் கொண்டு எங்கோ வெளியில் சென்றார்.இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் தொடரும்...... 

Tuesday, July 17, 2018

மஸ்தான் சாகிப் ஜீவசமாதி


குணங்குடி மஸ்தான் சாகிபு ஜீவசமாதி கட்டிடத்தில் சில பூச்சு வேலை நடைபெற வேண்டியுள்ளது. அதற்கு தேவையான பொருட்களை வழங்குமாறு அங்கிருந்த ஹாஜியார் எங்கள் குழுவினரிடம் கேட்டுக் கொண்டார்கள்.பணமாக தர வேண்டாம் ஐயா பொருளாக கொடுத்தால் நன்று என்று கூறியுள்ளார் .குணங்குடி மஸ்தான் சாகிபு ஜீவசமாதி கோவிலுக்கு இயன்ற உதவிகளை செய்து தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் .இந்த பதிவை பகிர்ந்து கொண்டு தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.ஜீவசமாதி கோயில் கட்டிட வேலைக்கு பங்களிப்பது திருக்கோயில் கட்டுவதற்கு சமமாகும். உங்கள் வம்சத்திற்கு மகான்களின் அருள் கிடைக்கும் .ஆசீர்வாதம் கிடைக்கும் உங்கள் கர்மவினைகளை அவர்கள் எளிதாக கழித்து விட வழிவகுப்பார். ஜோதிட ரீதியாக பார்த்தோம் என்றால் இது ஒரு ராகு கேது பரிகாரமாகும்.  குணங்குடி மஸ்தான் சாகிபு ஜீவசமாதி கோயில் ஹாஜியார் செல்லிடபேசி எண் 9566150784 அவரை நேரடியாக தொடர்பு கொண்டு பேசி வேண்டுவன செய்யுங்கள் அன்பர்களே சகோதர சகோதரிகளே .

குணங்குடி மஸ்தான் சாகிபு
குணங்குடி மஸ்தான் சாகிபு (1792 - 1838: சென்னை) ஒரு இசுலாம் அறிஞர். இவர் பல இசை உணர்வு மிக்க பாடல்களை எழுதியுள்ளார். இவர் தமிழ் சித்த மரபினரில் ஒருவராகவும் கருதப்படுகிறார்

குணங்குடி மஸ்தான் சாகிபு இராமநாதபுரம் தொண்டிக்கு வடமேற்கில் பத்து மைல் தொலைவிலுள்ள குணங்குடி என்னும் சிற்றூரில் 1792 ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் 'சுல்தான் அப்துல் காதிர்' என்பதாகும். இளமையிலேயே குர்ஆன் மற்றும் இசுலாமிய சமய சாத்திரங்களைக் கற்றுணர்ந்து 'ஆலிம்' (சமயக் கல்வி அறிஞர்) என்னும் பட்டம் பெற்றார்.
பற்றறுத்த உள்ளத்துடனும், தந்தையின் ஆசியுடனும் தம்முடைய பதினேழாவது வயதில் ஞானபூமியாகத் திகழ்ந்த கீழக்கரை சென்று அங்கு 'தைக்காசாஹிபு' என்று அழைக்கப்பட்ட ஷைகு அப்துல் காதிரிலெப்பை ஆலிம் ஞானியிடம் மாணாக்கராக இருந்து சமய ஞானத்தையும், தவ வழிமுறைகளையும் கற்றுத் தெளிந்தார். 1813 ஆம் ஆண்டில் அவர் திரிசிரபுரம் சென்று அங்கே மௌலவி ஷாம் சாஹிப் என்பவரிடம் தீட்சை பெற்று ஞானயோக நெறியில் ஆழ்ந்தார். பின்னர் சிக்கந்தர் மலையென அழைக்கப்படும் திருப்பரங்குன்றம் சென்று அங்கே நாற்பது நாட்கள் 'கல்வத்' எனப்படும் யோக நிட்டையில் ஆழ்ந்தார். பின்னர் அறந்தாங்கிக்கு அருகிலுள்ள கலகம் என்ற ஊரில் ஆறு மாதங்களும், தொண்டியில் அவருடைய தாய்மாமனாரின் ஊரான வாழைத்தோப்பில் நான்கு மாதங்களும் தங்கி நிட்டை புரிந்தார். இவ்வாறே சதுரகிரி, புறாமலை, நாகமலை, ஆனைமலை போன்ற மலைகளிலும், காடுகளிலும், நதிக்கரைகளிலும் தங்கித் தவம் புரிந்தார்.
இறைகாதலால் முற்றும் கவரப்பட்டவராகவும், தெய்வீகக் காதல் போதையில் வெறியேறியவராகவும் அவர் இருந்ததால் உலகநடை நீங்கி பித்தநடை கொண்டார். குப்பைமேடுகள் கூட அவர் குடியிருக்கும் இடங்களாகின. அவருடைய பித்தநடையையும் அற்புத சித்துகளையும் கண்ட மக்கள் அவரை 'மஸ்தான்' என அழைக்கலாயினர். அப்பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது. (மஸ்த் என்ற பாரசீகச் சொல்லுக்கு போதைவெறி என்று பொருள். இறைகாதல் போதையில் வெறி பிடித்த ஞானியரை 'மஸ்தான்' என அழைப்பது மரபு)
ஏழு ஆண்டுகள் இவ்வாறிருந்து, பின்னர் வடநாடு சென்று பலருக்கு ஞானோபதேசம் செய்தார். இறுதியில் சென்னையை அடைந்து இராயபுரத்தில் பாவாலெப்பை என்பவருக்கு உரிமையான, முட்புதர்களும் மூங்கிற் காடும் சப்பாத்திக்கள்ளியும் மண்டிக் கிடந்த இடத்தில் தங்கலாயினார். பாவாலெப்பை குணங்குடியாரின் மகிமை உணர்ந்து அவ்விடத்திலேயே அவருக்கு ஆச்சிரமம் அமைத்துக் கொடுத்தார். இங்கே வாழ்ந்தபோது யார் கண்ணிலும் படாமல் மறைந்திருந்து யோகநிட்டையில் ஆழ்ந்திருந்தார். சில வேளைகளில் தாம் இயற்றிய கீர்த்தனங்களைப் பாடிக்கொண்டு ஊர்வலமாகச் செல்வதுமுண்டாம். அப்படிச் செல்லும்போது ஒருமுறை அங்கப்பநாயக்கன் தெருவிலுள்ள 'மஸ்ஜிதே மஃமூர்' என்ற பள்ளிவாசலுக்கும் வந்து சென்றதாகக் கூறுவர்.
குணங்குடியாரின் துறவு நிலையில் ஐயுற்ற சிலர் அவரது அரிய சித்துக்களைக் கண்ட பின்னர் அவரை மதித்துப் போற்றினர். அவரிடம் தீட்சை பெற்று பக்குவமடைந்தனர். அவ்வாறு தீட்சை பெற்றவர்களுள் அக்காலத்தில் சென்னையிலிருந்த ஆற்காடு நவாபும் ஒருவர். அவருடைய சீடர்களாக இசுலாமியர் மட்டுமன்றி இந்துக்களும் இருந்தனர். அவர்களில் மகாவித்துவான் சரவணப்பெருமாள் ஐயர், கோவளம் சபாபதி முதலியார் ஆகியோர் மிகப் பிரதானமானவர்களாக இருந்தனர்.
மஸ்தான் சாகிபு 1838 ஆம் ஆண்டு (ஹிஜ்ரி 1254, ஜமாதுல் அவ்வல் 14ம் நாள் திங்கட்கிழமை வைகறை நேரம்) இவ்வுலக வாழ்வைத் துறந்தபோது அவருக்கு வயது நாற்பத்து ஏழு. அவர் தங்கியிருந்த இடத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார். அவரை மக்கள் தொண்டியார் என்று அழைத்து வந்ததால் அவரிருந்த இடம் தொண்டியார்பேட்டை ஆயிற்று.

Saturday, July 14, 2018

அரங்கர் மகிமை

முருகா ! அரங்கா ! நன்றி ! அரங்கரின் ஆசி பெற்ற சேலம் தொண்டரின் பதிவு !!!!!! ஓம் அகத்தீசாய நம.....
" * * *அரங்கரின் மகிமை* * * "
இறைவனை தரிசிக்க வேண்டும் எனில் அந்த நொடிபொழுது முதல் பயபக்தியுடன் செல்வோம் தானே..
அன்றும் இரண்டு அன்பர்கள் அரங்கரை தரிசிக்க சென்றார்கள்....வாகனத்தை இயக்கிவந்த அன்பர் ஆசான் பெருமையை பேசிய படி வந்தவர் சட்டென அமைதியாக வந்துள்ளார்,..
அருகில் அமர்ந்து வந்த மற்றொரு நபர் ஏன் இவர் அமைதியாக வருகிறார் என குழப்பமாக இருந்தும் அரங்கரின் புகழ்மாலை கேட்டு கொண்டே செல்கிறார்கள்....அன்பர் ஏன் இந்த அமைதி என்ன காரணம் என வினவ!!??
அன்பரே, இதோ இந்த சாலையில் நடுவில் எத்தனை அழகாக மலர்கள் மலர்ந்து உள்ளதை பாருங்கள்
இவை அனைத்தும் " அரங்கரின் திருமலரடியை" சென்று அடைய வேண்டும் என மனதில் நினைத்து பூஜித்துகொண்டே செல்வது எனது வழக்கம் என கூறி இருக்கிறார்....
.....அட !!. என்னப்பா இப்படி ஒரு பூஜையா , இவ்வளவு எளிமையாக !!??? ஆசான் இதை ஏற்றுக்கொள்வாரா!!?? என மனதில் பல கேள்வியோடு இவரை பார்க்க...
குடிலும் வந்தது , ஆசானை தரிசிக்க சென்றார்கள்....
ஆசான் இருவரையும் பார்த்து சிரிப்புடன் , நாங்களும் அந்தரங்கத்தில் கூடை கூடையாக மலர்களை மலைபோல் குவித்து அகத்தீசருக்கு பூஜை செய்வோம் ப்பா என கூற!!! இருவரும் மெய்சிலிர்த்து ஆசான் திருவடிகளை வணங்கி ஆசி பெற்றோம் என்றனர்.........ஆம் உண்மை எப்போதும் எளிமையாக இருக்கும்!!!!!
தூய பக்தி என்பது இதுபோல தான், அரங்கா முருகா ....
நாம் வாழ்க்கையில் கடைபிடிக்க முடியாது என்று நினைத்த பல செயல்களை குருநாதரை சந்தித்த பிறகு மிகவும் எளிமையாக, நடக்கிறது என்பது அன்பர்கள் அனைவரும் உணர்ந்துதானே.....
குருவே வாழ்க வாழ்க...
திருவடிகள் சரணம் சரணம்.

Thursday, July 12, 2018

கொல்லா நெறி

அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி கொல்லோ நெறியே குவலயம் எங்கும் ஓங்குக. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல். துஞ்சலெனும் இன்னலகற்ற இலங்கு. ஓம் இராமலிங்க சாமிகள் திருவடிகள் போற்றி. 

Wednesday, July 11, 2018

ஜீவ தயவே

முருகா என்றால் :

சாதாரண மனிதன் ஞானியாகுவதற்கு முதல் தடையாய் இருப்பது உயிர்க்கொலை செய்து அதன் மாமிசத்தை உண்டதால் வந்த பாவம்தான் என்ற உண்மையை உணர்ந்து உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சைவஉணவை மேற்கொண்டு ஞானம்பெற முருகன் திருவடியை பற்றிட வேண்டுமென்ற மனஉறுதி தோன்றும்.

இயற்கை மனிதனை தோற்றுவிக்கும்போதே அந்த மனிததேகத்தினை சைவஉணவிற்கு உகந்ததாகத்தான் தோற்றுவித்தது. அவனது செரிமான மண்டலத்தில்கூட மாமிசத்தை செரிப்பதற்கான எந்த சிறப்பு அமைப்பும் இல்லை. ஏனெனில் ஞானம் பெறுவதற்காகவே உருவாக்கப்பட்ட சிறப்பான இந்த மனித தேகத்தில் பாவம் சேர்ந்து விடலாகாது என்பதினாலேயே இயற்கை ஜீவதயவின் அருளைப் பெற ஏதுவாக சைவஉணவை மேற்கொண்டு சாந்தமனநிலை கொண்டு ஜீவதயவினால் ஒளிதேகம் பெற்றிடவே இந்த தேகத்தை சாந்த தேகமாக படைத்திட்டது.

ஆனால் இயற்கையின் கொடையை அதன் அற்புதம் உணரா மனிதன் சுவைக்கு அடிமையாகி உணவு தேடலில் ருசியின் தன்மைக்கு அடிமையாகி எளிமையாக கிடைக்கிறது, சத்தானதாக உள்ளது என கற்பனை செய்து மாமிசத்தை சாப்பிட ஆரம்பித்தான்.

என்றைக்கு மனிதன் உயிர்க்கொலை செய்து அதன் மாமிசத்தை சாப்பிட ஆரம்பித்தானோ அன்று வந்தது அவனது வினைத்தொடர்ச்சி. அன்று வந்தது அவனது அதீத பாவச்சுமை. அன்று வந்தது அறியாமையெனும் அதீத இருள். அன்று தான் இறைவனுடன் கொண்டிருந்த அற்புத தொடர்பு துண்டிக்கப்பட்டு அறியாமை எனும் இருளில் மூழ்கி ஒளிபொருந்திய தூய சாந்தஅறிவு மழுங்கி மிருக அறிவு ஓங்கி மும்மலக் குற்றத்துள் ஆழஆழ புதைந்தனன் மனிதன்.

அந்தோ பரிதாபம்! தான் என்ன செய்கின்றோம் என்றே அறியாமல், அறியாமையில் உழன்று உழன்று உயிர்க்கொலை செய்த பாவம் இன்றுவரை அவனை மீளவிடாமல் மீண்டும் மீண்டும் பாவத்தில் தான் தள்ளுகிறதே தவிர அவனை மீண்டு வரவிடவே இல்லை. 

ஞானம்பெற தலையாய குணம் ஜீவதயவு, ஜீவதயவு ஞானவீட்டின் திறவுகோல். ஆதலின் ஞானம்பெற விரும்புகிறவன் ஜீவதயவின் முதல் எதிரியான உயிர்க்கொலையை கண்டிப்பாக இனி அவனது வாழ்நாளில் ஒருமுறை கூட செய்திடல் ஆகாது.

ஞானம்பெற விரும்புகின்ற ஒருவன் ஜீவதயவாகிய ஞானவீட்டின் திறவுகோலை தொலைத்துவிட்டு ஞானம்பெற விழைவது எப்படி சாத்தியம்.

உயிர்க்கொலை செய்பவனுக்கு எப்படி ஜீவதயவு வரும்? ஜீவதயவை தொலைத்தவனுக்கு ஞானம் எப்படி வரும்?

ஆதலின் ஞானம்பெற விரும்புகிறவன் முதன்முதலில் ஜீவதயவை பெற ஏதுவாக உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து ஞானிகள் திருவடியைப் பற்றினால் தான் ஞானத்திற்குரிய சிறப்பறிவை தலைவன் முருகன் அருளால் பெறலாம்.

தாவரங்களும் உயிர்தானே அது உயிர் கொலையில்லையா என்பார் அறிவாளி சிலர். ஓரறிவு உயிர்தனை கொன்றால் பாவம்தான், அதுவும் உயிர்தான். ஆயின் மனித முயற்சியால் ஒருபடி நெல்லை உண்ட மனிதன். அதே தனது சுய முயற்சியால் அதன் முளைக்கா வித்தை அது முளைப்பதற்கு ஏதுவாக நிலம்தனை பண்படுத்தி பதப்படுத்தி நீர்விட்டு, உரமிட்டு அந்த ஒரு உயிருக்கு பதிலாக உபகாரமாக ஆயிரம் ஆயிரம் கோடி உயிர்களை அவனது முயற்சியால் தோற்றுவிக்க இயலும். இயற்கை மனிதன் கடைத்தேற்றுவதற்காகவே சைவ உணவையும், அந்த உயிர் பாவம் நீங்க அவனுக்கு ஆறாம் அறிவாகிய பகுத்தறிவின் மூலம் அந்த ஓரறிவின் கொலை பாவம் நீங்க அந்த ஓரறிவு உயிரை உண்டாக்கி பெரும் புண்ணியத்தையும் இணைத்தே தருவித்து தோற்றுவித்தது. ஆனால் ஐந்தறிவு உடைய விலங்கை கொன்றால் மீண்டும் மனிதனால் தோற்றுவிக்கலாகாது.

ஆதலின் உடம்பினின்று உயிர் பிரித்து மகிழ்ந்து சுவை கொட்டி சாப்பிடும் அசைவ உணவினை விட்டு விலகினால் அன்றி உயிர்க்கொலை பாவம் நீங்கினாலன்றி அவனது ஞான முயற்சியில் எத்துணை எத்துணை புண்ணியம் செய்தாலும் கடைத்தேற இயலாது என்பதையும் இறையருள் பெற முடியாது என்பதையும் முருகனது திருஅருள் கொடையால் உணர்வார்கள்.

முருகா! முருகா! முருகா! என்போம் ஜீவதயவின் தலைவன் ஜீவதயாசோதி முருகன் அருளைப் பெறுவோம். ஜீவதயவுடையவராய் ஆகியே ஞானம் பெறுவோம். முருகன் அருளே சிறப்பறிவாய் மாறி ஜீவதயவை நம்முள் தோற்றுவிக்கும்.
.............. 

மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்

Tuesday, July 10, 2018

சித்தன் அருள்

ஓம் அகத்தீசாய நம அகத்தியன் அருள் வலைத்தளத்தை வாசிக்கும் அன்பர்களுக்கு அடியேனின் வணக்கம். நமது பிறப்பு நம்முடைய கர்ம வினை மூலமாக தான் நமக்கு அமைகிறது. நம்முடை தாய் தந்தை சகோதரன் சகோதரி உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைத்தும் நமக்கு அமைகிறது. இதை மாற்ற என்ன வழி சித்தர் வழிபாடுதான் அனைத்திற்கும் தீர்வு அகத்திய பெருமானை குருவாக ஏற்று அவன் திருவடி தொழுதால் நம்முடைய கர்மவினை நீங்க நமக்கு உபாயம் சொல்லி நம்மை ஆட்கொள்வான். கர்ம வினை தீர ஒரே வழி புண்ணியம் செய்வதுதான். அன்னதானம் செய்வது தொண்டு செய்வது எவ்வுயிரையும் கொல்லாமல் இருப்பது இவை அனைத்தும் நம்முடைய கர்மவினை நீங்க வழிகளாகும் என்று அகத்திய பெருமான் நமக்கு சொல்லும் அறிவுரைகள் ஆகும். நாம் எல்லோரும் இவற்றை கைபிடித்து ஜென்மத்தை கடைத்தேற்றிக்கோவோம். இன்றைய  அனைவருக்கும் நன்மை நடைபெற எல்லா வல்ல அகத்திய பெருமானை வேண்டிக்கொள்கிறேன். வாழ்க வளமுடன் ஓம் அகத்தீசாய நம. நற்பவி 

Friday, July 6, 2018

சித்த மார்க்கத்தின் தொடர்ச்சி 15

[தவத்திரு தங்கராசன் அடிகளார், இறைவனுடன் ஒன்று கலந்துவிட்டார் என கேள்விப்பட்டேன். அகத்தியருக்கும், அவர் அடியவர்களுக்கும், இறைவனுக்கும் எத்தனையோ உயர்ந்த தொண்டினை செய்து வந்தவர். அந்த புண்ணிய ஆத்மா இறைவனுடன் கலந்து மோக்ஷமடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்! இவ்வுலகில் அந்த ஆத்மாவுக்கு இனி ஒரு பிறவியை கொடுக்காதீர் இறைவா என அடியேன் மனம் வேண்டிக்கொள்கிறது! இனி எளிய அறிவுரைகளுக்கு செல்வோம்.]

அவர் மேலும் தொடர்ந்தார்.

இலக்கணமே, குறளாயிற்று!

தன் பசி, தன் வேதனை உணர்ந்தவனுக்குத்தான் அடுத்தவனுக்கு பசிக்கும், வலிக்கும் என்று உணர முடியும்.

தமிழை, முருகோனை தயையுடன் உபயோகியுங்கள். உங்கள் நாவில், வாக்கில் சுப்ரமண்யன் உறைவான். உங்களை எப்பொழுதும் சித்தர்கள் சுற்றி நின்று காப்பார்கள்.

வாழ்க்கை நன்றாய் அமைய, வாக்கில் தெய்வம் குடியிருக்க வேண்டும்.

உணர்வை கட்டிப்போட்டு, உயர்ந்த நிலைக்கு வழிமாற்று. ஆனால் எதையும் கட்டிப்போட்டு வளர்க்காதே! அது உனக்கு நீயே சேர்த்துக்கொள்ளும் எதிர்கால சிறைவாசம்!

சேர்த்துக் கொண்ட கர்மா, கரையக் கரைய, புற்றுமண் கரைந்து நாகம் வெளிப்படுவது போல், இறைவன் உன்னுள்ளே தோன்றுவான்.

அன்னம் தானமாயினும், அது நாராயண சேவை! ஆத்மா நீங்கிய உடல் அக்னிக்கு கொடுக்கினும், அது சிவபெருமான் சேவை.

இவ்வுலகில், நிலையானது என ஒன்றில்லை, இறைவதனைத்தவிர.

எண்ணம் இலை மறை காயாய் இருந்தாலும், இறை வாசம் இருந்தால்தான், கனியும்.

பஞ்சதாயன பூசையில் சுப்ரமணியன் எங்கு போனான் என்று தேடுபவனுக்கு, "பராபரம்" எளிதில் காட்டப்படும்!

சின்முத்திரை தத்துவமாகு; சிதறிய வாழ்க்கை, ஒன்று சேரும்!

நெல்மணியாய் விளைந்து நில், பவ்யமாய் வளைந்து நில். உன்னுள்ளே "அரிசிவமாய்" இறைவன் இருப்பான்.

எங்கும், இனிப்பே கசப்பானது, காரமே, புளிப்பானது.

வியாதிக்குள் கர்மா மறைந்திருப்பதுபோல், பசிக்குள் கர்மா தகிக்கப்படுகிறது. வயிற்றில் நித்தமும் கர்மா தகனம் நடக்கிறது.

இப்படி அவர் கூறிக்கொண்டே செல்லச்செல்ல, கேட்ட நானே அசந்து போனேன். அத்தனையும் ஞாபகத்தில் வைக்க முடியுமா என்ற  எண்ணம் தோன்றியது. அதை புரிந்து கொண்டாற்போல், சிரித்தபடியே நிறுத்தினார்.

"சரி! "தலை கீழ் லிங்கத்தைப்" பற்றி பார்ப்போம்!"  என்றார்.

"சிவயோகிகள், த்யானத்தில் அமர்ந்து, தங்கள் சஹஸ்ராரத்தில் இறைவன் திருவடியை தியானித்து இருப்பர். தியானத்தின் உச்சநிலையில், திருவடி மறைந்து ஒரு லிங்க ரூபமாக மாறும். மேலும் தொடர்ந்து த்யானத்தில் அமர்ந்திருக்க, அந்த லிங்கமானது, அவரின் உள் பாகத்தை நோக்கி, மெதுவாக திரும்பும். இதை "விளைதல்" என்றும் கூறலாம். பயிர் விளைந்து நெல் மணி தோன்றும் பொழுதுதானே தலை சாய்க்கத் தொடங்கும். அதுபோல் தவத்தின் வலிமை கூடக்கூட, இறைவனே மனம் கனிந்து, தன்னை தவசியின் பக்கம் திருப்பிக்கொள்கிறார் எனலாம். ஒரு காலத்தில், அந்த லிங்கம் "தலை கீழ் லிங்கமாக" முழுமையாக மாறியபின், அதிலிருந்து ஒரு நாழிகைக்கு, ஒரு சொட்டு என ஒரு அமிர்தம் அந்த உடலுக்குள் மழைத்துளி போல் வீழும். அந்த அமிர்தம் வீழ்ந்து, வீழ்ந்து, அந்த உடல் மிக மிக சுத்தமாகும். உடல் முழுவதும் அந்த அமிர்தம் பரவிவிட்டால், பின்னர் அவனுக்கு, சுவாசிக்க, காற்று கூட தேவை இல்லை. இதை முடிந்தால் முயற்சி செய்துபார் என சொல்லாமல், சொல்வதுதான் நீ பார்த்த ஸ்தூல "தலைகீழ் லிங்கம்". உன்னால் முடிந்தால் த்யானத்தில், சூக்ஷுமத்தில் "தலை கீழ் லிங்கத்தை" பார்க்க முயற்சி செய்து பார்" என மிகப் பெரிய விஷயத்தை சர்வ சாதாரணமாக, எளிதாகக் கூறினார்.

எத்தனையோ விஷயங்களை இத்தனை நேரம் கூறியிருந்தாலும், இது ஒன்றுதான் நடைமுறைப்படுத்துவது, மிக கடினமான ஒன்றாக இருக்கும் என என் மனம் கூறியது. இந்த வழிகளில் எல்லாம் நடந்து சென்று, விடாப்பிடியாக, திட மனதுடன் இருந்த மனிதர்கள் தான் பிற்காலத்தில் "சித்தர்களாக" மாறியிருக்கிறார்கள் என பல பெரியவர்கள் கூறியதை அப்போது நினைவு கூர்ந்தேன்.

[அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்! அடியேனுடைய குருநாதர் "முருகா" என்பவர், கடந்த சனிக்கிழமை அன்று இறைவனுடன் ஒன்றிக் கலந்துவிட்டார். அவரது இழப்பு, என்னுள் ஒரு வெறுமையை உருவாக்கிவிட்டது. எத்தனையோ நல்ல வழிகளை காட்டி, "நடந்து செல்! நான் இருக்கிறேன் கூட!" என்று வாழ்வை செம்மையாக்க வழிகாட்டியவர். மனம், உணர்வுகள் அனைத்தும் வெறுமை அடைந்துவிட்டது. ஒரு சில காலம் தனிமையாக இருக்க விரும்புகிறது. மனம் ஒன்று படும் போது, "சித்தன் அருளில்" தொடர்கிறேன். அதுவரை, சற்று விடை கொடுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்!]

சித்தன் அருள்................... நிச்சயமாகத் தொடரும்!


Tuesday, July 3, 2018

சித்த மார்க்கத்தின் தொடர்ச்சி 14

நான்காவதாக, இறைவனே தமிழ் உருக்கொண்டிருக்கும் இந்த நாட்டில், அந்த தமிழை வைத்தே, இறை நிந்தனை நிறையவே நடக்கிறது. இறை நிந்தனை செய்பவனை விட்டு விலகி விடவேண்டும். நம் கண்கள் அதை பார்க்கும்படியோ, நம் செவிகள் அதை கேட்க்கும்படியோ வைத்திருக்கக்கூடாது. கொடுத்தால், வாங்கும் கரங்கள் இருந்தால்தான் கொடுத்தது போய் சேரும். அதுபோல், இறை நிந்தனையை கேட்டு உள்வாங்க ஒருவரும் அங்கிருக்க கூடாது. உன்னை நீயே விலக்கிவிடு, அந்த சூழ்நிலையை, மனதை விட்டு அகற்றிவிடு. நீ ஏன் ஒரு சாட்சியாய் இருக்க வேண்டும்?

இல்லை என்ற வார்த்தை எங்கள் அகராதியில், இல்லை என்பதே உண்மை. அத்தனை வாரி வழங்கித்தான், இவ்வுலகை, சித்தர்கள் கட்டி காத்து வருகிறார்கள். உன்னிடம் கொடுக்கப்பட்டதெல்லாம், உனக்காக மட்டும் என்று நினையாதே. அங்கு ஒரு சோதனையை இறைவன் உன் முன் வைக்கிறான் என்பதை கவனி.

உருவ வழிபாட்டை எதிர்த்தவர்கள் சித்தர்கள். அதே சித்தர்கள் நிறைய கோவில்களை கட்டி, இறைவனை உருவத்தில் பிரதிஷ்டை செய்ததும் உண்மை. ஒன்றாம் வகுப்பில் படிக்கும் குழந்தைக்கு தேவையான பாட புத்தகங்கள், அது வளர்ந்து மேல் படிப்பு படிக்கும் பொழுது காணாமல் போய்விடும். ஒன்றாம் வகுப்பு பாடம் கோவில்களில் தொடங்கும். பின்னர் படித்தது வளர்ந்து, முதிரும் பொழுது, கோவில்கள், அடுத்த தலைமுறைக்கு தேவைப்படும், வளர்ந்த உனக்கு  தேவை இல்லை என்பதே உண்மை.

உள்ளவனிடம் இருப்பதெல்லாம், இறையே அவன் பாவ புண்ணியத்தை நோக்கி கொடுத்ததாகினும், அங்கும் ஒரு சோதனைதான் நடக்கிறது. உள்ளவன், இல்லாதவனை கைதூக்கி விடுகிறானா என, இறைவன் பார்க்கிறான்.

தெரியாதவன் செய்த தவறை இறைவன் மன்னிக்கலாம், எல்லாம் அறிந்தவன் செய்தால், மன்னிப்பே கிடையாது, தண்டனை உடனேயே.

உனக்குள்ளேயே, உன் அனைத்து கேள்விகளுக்கும் பதில் உண்டு. தேடு, அவை கிடைக்கும், தொலைந்து போகமாட்டீர்கள்.

அந்த பெரியவர், வேகமாக அறிவுரைகளை அடுக்கி கொண்டு போகவே, ஆச்சரியத்துடன் கவனித்துக் கொண்டிருந்தேன்.

சுருக்கமாக சொல்வதில் எல்லாம், மிக உயர்ந்த, விரிவான சித்த மார்க அறிவுரைகள் இருந்ததுதான், என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.

அதை உணர்ந்த பெரியவர், "கடுகு சிறுத்தால் ; காரம் போகுமோ" என்று புன்னகைத்தபடியே ஒரு இடைவேளை விட்டார்.

சித்தன் அருள்................. தொடரும்!

சித்த மார்க்கத்தின் தொடர்ச்சி 13

தலைகீழ் லிங்கத்தை பற்றி கூறும் முன் ஒரு சில விஷயங்களை தெரிவிக்க விரும்புகிறேன். இங்கு நடந்த கலந்துரையாடலை நீ வெளியிடும்பொழுது, வாசிக்கிற அனைவரும், இனி கூறப்போகிற விஷயத்தை அவர்கள் வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும். இரண்டு வருடமாக, தூது அனுப்பிய பின்தான் உனக்கு சந்திக்கவே அனுமதியளித்தோம். முதலில், விரிவாக எதையும் கூற வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தோம். இருப்பினும், இந்த விஷயங்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்கிற உன் நல்ல எண்ணத்துக்கு மதிப்பளித்து, இத்தனை விரிவாக கூறினோம். சரி விஷயத்துக்கு வருவோம்.

சித்த மார்கத்தை தேர்ந்தெடுத்தவர்கள் அனைவரையும் "சித்த வித்யார்த்திகள்" எனத்தான் அழைப்பார்கள். இத்தனை தகவலை உன்னுடன் பகிர்ந்து கொண்டாலும், இன்னமும், நானும் ஒரு "வித்யார்த்திதான்". அப்படிப்பட்ட எண்ணம்தான் உயர்வை தரும். சாதாரண மனித வாழ்விலிருந்து, விலகி நின்று, சித்த மார்க்கத்தின் பாதையில், பயிற்சி செய்து, எண்ணங்களை தூய்மையாக்கி, ஒரு புள்ளியில் நின்று, தவத்தில் இருப்பவர்களை, பிறரின் எண்ண அலைகள் நிறையவே பாதிக்கும். அவர்கள் தவத்திற்கு, இடையூறாக இருக்கும். எல்லா மனிதர்களும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட கர்மாவில், எப்பொழுதேனும் ஒரு பெரியவரை சந்திக்க நேரலாம். அப்படி சந்தித்தபின், அவருடன் கலந்துரையாடியது, எண்ணங்களை பகிர்ந்து கொண்டது, நிறையவே மனதுக்கு இதமாக இருக்கும். தன்னையே மறந்து விடுவார்கள். பின்னர், அவரிடமிருந்து விடை பெற்று தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு வந்த பின், கிடைத்த வெளிச்சத்தை/ஞானத்தை தங்கள் வாழ்வில் நடைமுறைப்படுத்தி முன்னேற முயற்சிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, சொல்லித்தந்தவரையே, நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. அப்படிப்பட்ட நினைப்பு, அவர்கள் தவத்துக்கு இடையூறாக இருக்கும். அவர்கள் செல்கிற சித்த மார்க்க வழியில் தடங்கலாக இருக்கும், அவர்களை பின்னுக்கு இழுக்கும். இந்த ஒரு காரணத்தினால்தான், சித்த மார்கத்தை ஏற்றுக்கொண்டவர்கள், எதுவும் பேசாமல், எல்லோரையும் விட்டு விலகியே இருக்கிறார்கள்.

இரண்டாவதாக, சித்த மார்க்கம் என்பது, பிற உயிர்களுக்கு துன்பம் விளைவிக்கக் கூடிய செயல்களை அறவே விலக்குகிற ஒரு வழி. பிற உயிர்களுக்கு/எந்த ஜீவனுக்கும் ஊறு விளைவிக்கக் கூடிய மனநிலை உடையவர்கள் யாரும், தாங்களாக நிரந்தரமாக திருந்தும் முன், எட்டிக் கூட பார்க்காதீர்கள். உதாரணமாக, அசைவ உணவு உண்பவர்களை கூறலாம். குருவின் சாபத்துக்கு, ஏதேனும் ஒரு ஜென்மத்தில் ஒரு குருவுக்கு பணிவிடை செய்து பரிகாரம் தேடிக்கொள்ளலாம். சித்தர்கள் சாபத்துக்கு, ஒரு பொழுதும், எத்தனை ஜென்மம் எடுத்தாலும், விமோசனம் கிடையாது. மிகுந்த ஆபத்தை விளைவிக்கக் கூடியது. குருவின் சாபத்தை இறைவன் ஜாதகம் வழி காட்டிக் கொடுத்துவிடுவான். சித்தர்கள் சாபத்தை மறைத்துவிடுவான். இறைவனுக்கு தெரியும் இருந்தும், இன்னொரு சித்தனால்தான் அதை கண்டு பிடிக்க முடியும். ஒருவழியிலும் கண்டு பிடிக்க முடியாத அப்படிப்பட்ட சாபத்தை, சாதாரண மனிதன் ஏன் பெறவேண்டும்? குருவை குளிரவைத்து பரிகாரம் தேடிக்கொள்ளலாம், குரு சாபம் விலகிவிடும். பற்று இல்லாத சித்தனை எப்படி குளிர வைக்க முடியும்? என்று விடுதலை கிடைக்கும்?

மூன்றாவதாக, சித்தர்கள், வாமாசாரத்தை (அதர்வண வேதத்தை) மருத்துவத்துக்காக மட்டும் உபயோகப்படுத்துவார்கள். அவர்களுக்கு எல்லா பிரயோகமும் கைவந்த கலை. எங்கு எப்பொழுது எதை செய்யவேண்டும் என்றாலும் கூட, இறைவனின் அனுமதியுடன்தான் செய்வார்கள். அவர்கள் இறைவனின் செல்லப் பிள்ளைகள் மட்டுமல்ல, இறைவனின் அபிமான கரங்கள். அவர்கள் வழிதான், இறைவன் இன்றும் பல அரிய திருவிளையாடல்களை,  நடத்துகிறான். மந்திரவாதம், செய்வினை இவைகள் அவர்கள் முன் காணாமல் போய்விடும். மனிதர்கள், ஒரு பொழுதும் அந்த பாதைகளில் சஞ்சரிக்கவே கூடாது. இன்று வாமாசாரம் இத்தனை வளர்ந்து நிற்க, இந்த மனிதர்கள்தான் காரணம். ஒருவன் கர்மாவில் அது எழுதப்பட்டிருந்தாலும், அதை எதிர்த்து போராடி வாழவேண்டும், இறை அருளை பெறவேண்டுமே தவிர, எந்த ஒரு ஜீவனுக்கும் எதிராக அதை பிரயோகிக்கக்கூடாது.