Wednesday, August 22, 2018

சித்த மார்க்கத்தின் தொடர்ச்சி 19

"மன்னிக்கவும், அடியேனின் கேள்வியில் தவறிருந்தால். இத்தனை வளர்ந்து போய்விட்ட மனித சமூகத்துள், எவ்வளவு தூரம் இதை பார்த்து நடப்பது. சரி! அப்படியே ஒருவர் இருந்திட தீர்மானித்தாலும், பாபம் சேர்ந்த உணவா, இல்லையா என பிரித்தறிவது எவ்விதம்? நீங்கள் சொல்கிற சாத்வீக வழி, நடைமுறையில் சாத்தியமா?" என்றேன், நிதானமாக.

"நடைமுறைக்கு சாத்தியம்" என்றார் திடமாக.

என்னென்னவோ நல்ல வழிகளை ஆராய்ச்சி செய்து நடை முறைப்படுத்தி அனுபவம் பெற்றிருக்கிறார், இவர். அதனால்தான், இத்தனை திடமாக, கேள்வி முடிந்த வினாடியில், பதில் கூறுகிறார் என்று உணர்ந்தேன்.

"சரி! நம்புகிறேன்! ஆனால் அதை தெளிவு படுத்துங்களேன்!" என்றேன்.

"சித்தர்கள் மொழியில் ஒரு வாக்கியம் உண்டு. "கருவாட்டைக்கூட, கத்திரிக்காயாக மாற்றத் தெரிந்தவன், சித்தன்" என்று. அது மாயாஜாலத்தை குறிப்பதல்ல. அதை பற்றி முடிந்தால் பிறகு பார்ப்போம். "ஆசாரம்" என்கிற ஒரு வழக்கத்தை மேன்மை பொருந்திய மனிதர்கள் தொடர்வதை கேள்விப்பட்டிருக்கிறாயா?" என்றார்.

"ஆம்! இறை வழியில் செல்பவர்கள், ஒரு பொழுதும் நிலை தடுமாறாதிருப்பவர்கள் ஒரு சில முறைகளை தொடர்ந்து செல்வதை "ஆசாரமான மனிதர்கள்" என்று கூறக்கேட்டிருக்கிறேன்" என்றேன்.

"ஆ" என்றால் இறைவனை குறிக்கும். "சாரம்" என்பது "சார்ந்திருத்தலை" குறிக்கும். இறைவனை சார்ந்திருத்தல் என்பது, இறைவனின் மன எண்ணப்படி, இறைவனாகவே வாழுகிற ஒரு முறை. எப்படி வாழ்ந்தால் இறைவனுக்கு பிடிக்கும் என்று தேடி கண்டுபிடித்து, அதன் படி வாழ்வதே "ஆசார முறை" ஆகும். அப்படியாயின், எந்த உயிருக்கும் ஒரு பங்கமும் செய்யாமல் வாழ்வது கூட ஒரு ஆசார முறைதான், இல்லையா."

"ஆமாம்!"

"உண்பவன், வாங்குபவன் இருந்தால் தானே, தவறு செய்பவன்/கொடுப்பவன் வளர்ந்து கொண்டே இருப்பான். உண்பவனே, தன்னை திருத்திக் கொண்டுவிட்டால், தவறு செய்பவன், திருந்தத்தானே வேண்டும்? மனிதர்கள் ஒவ்வொருவரும், தனிப்பட்ட முறையில், தீர்மானித்து, தன்னை திருத்திக் கொள்ளாதவரை, சைவம் என்று உண்பவர்கள் கூட, தவறு செய்பவரிடமிருந்து தெரிந்தோ/தெரியாமலோ பாபத்தை பங்கு போட்டுக்கொள்ளத்தான் வேண்டும், இல்லையா?" என்று நிறுத்தினார்.

"சமூகத்தை திருத்த முடியாது! தனிப்பட்ட மனிதர் திருந்தினால் அன்றி, ஒரு சமூகம் சுத்தமடையாது. சுத்தமில்லாத சமூகம், அடுத்த நல்ல தலைமுறையை எப்படி கொடுக்கும்?" என்றேன்.

"இப்பொழுது புரிந்ததா? மனிதருடன், கை சேர்த்து வாழ்ந்த சித்தர்கள் ஏன் திடீரென அவர்களை விட்டு விலகினார்கள் என்று? மனிதருடன் சேர்ந்தாலே பாவம் என்று அவர்கள் தீர்மானித்ததினால். ஆனாலும், என்றும் நம்பிக்கையை கைவிடாமல், மனிதன் என்றேனும் ஒரு நாள் உணர்ந்து திருந்துவான் என காத்திருக்கிறார்கள்" என்றார்.

சித்தன் அருள்........................ தொடரும்!

No comments: